கருணாநிதிக்கு தேன் கூட கசக்கும்: ஜெ. தாக்கு
சென்னை:
அதிமுக தொடங்கப்பட்டு இன்றுடன் 32 ஆண்டுகள் முடிவடைகிறது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுவிய அதிமுக 32 ஆண்டுகளைக் கடந்து 33-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற திருநாள் இன்று.
அநியாயத்தைத் தட்டிக்கேட்ட எம்ஜிஆர் அநியாயக்காரர்களால் வெளியேற்றப்பட்டபோதுதான் அதிமுகவுக்கு முகவுரை எழுதப்பட்டது.அன்றில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான சோதனைகளை கட்சி சந்தித்து இருக்கிறது.
ஒரு பெண் என்றும் பாராமல் என் மேல் ஏவி விடப்பட்ட வன்முறைகளையும், தடைகளையும் உடைத்து வென்ற வரலாறுதான் என் வரலாறு.
நமக்கு தமிழ் மக்கள் அளித்து இருக்கும் பொறுப்பு மகத்தானது. நாம் வாளாகவும், கேடயமாகவும் இருந்து தமிழகத்தைக் காத்து வருகிறோம்;தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். நாம் இல்லையென்றால், கட்சியையே குடும்பச் சொத்தாக்கிக் கொண்டவர்கள்தமிழ்நாட்டையும் தங்கள் குடும்பச் சொத்தாக்கி இருப்பார்கள்.
நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்யலாம் என்பதே எப்போதும் எனது சிந்தனை ஆகும்.
அதனால்தான் விவசாயிகளுக்கும், குடிசை வாசிகளுக்கும் முற்றிலும் இலவச மின்சாரம், வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு குறைந்தகட்டணத்தில் மின்சாரம் வழங்க மானியம், இந்தியாவிலேயே மிகக்குறைந்த விலைக்கு அரிசி, ஏழை எளியோருக்கு இலவச வேட்டி,சேலை,
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி, பள்ளிக் குழந்தைகளுக்கு சரி விகித சத்துணவு, ஆதி திராவிட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்,
கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பு, மீன் வளம் பெருக்கும் திட்டங்கள், மகளிர் நலன் காப்பு என்று பல திட்டங்கள்மூலம் அனைத்துப்பிரிவினரது நலனுக்காகவும் இந்த அரசு பாடுபட்டு வருகிறது.
சென்னை குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க கிருஷ்ணா நதி நீர், புதிய வீராணம் திட்டம் மற்றும் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம்ஆகியவற்றை நான் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறேன்.
நடக்கவே நடக்காது இந்தத் திட்டம் என்று கூச்சலிட்டவர்கள் எல்லாம் மூலையிலே முடங்கிக் கொள்ளும் வகையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது புதிய வீராணம் திட்டம்.
இது போன்ற சாதனைகளை இந்தியா மட்டுமல்ல, உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வமானஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, நான் ஆற்றி வரும் தொண்டுக்காக, நன்மதிப்பு மற்றும்மேதமைக்கான தங்கத் தாரகை விருதை எனக்கு வழங்கி உள்ளது.
திறமையான புலமை எனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் விருப்பம் நிறைவேறிஇருப்பதில் நாம் மகிழ்ச்சி அடையலாம்.
இவ்வாறு நாம் ஆற்றி வரும் பணிகள் உலகின் கவனத்தை ஈர்க்கின்ற போது, உள்ளூர் மனிதர்கள் சிலருக்கு அவை வேம்பாகக் கசக்கின்றன.உடல் முழுவதும் பொறாமையால் பீடிக்கப்பட்டு இருக்கும் பொல்லாத மனிதர்களுக்கு தேன் கூடக் கசக்கத் தான் செய்யும்.
ஆட்சி, கட்சி இரண்டையும் என் இரு கண்களாகக் கருதி நான் மக்கள் பணி ஆற்றி வருகிறேன். வளமான தமிழகத்தை உருவாக்க, கழகம்வலிமையோடு இருக்க வேண்டும். எனவே நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். நமக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றுகூறியுள்ளார்.