மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு
சென்னை:
சுனாமி அலை தாக்கிய பகுதிகளில் மத்திய குழுவினர் 2வது நாளாக இன்று ஆய்வு செய்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ஏ.கே.ஸ்ரீவத்சவா தலைமையில் ஒருகுழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த அவர்கள், பின்னர்
காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களைப் பார்வையிட்டனர்.
இந்த குழுவினர் மூன்றாக பிரிக்கப்பட்டு, முதல் குழுவினர் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும், 2-வது குழுவினர்நாகை மாவட்டத்தையும், 3-வது குழுவினர் கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்ட சேதங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.
இந்தப் பணி 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று காலை 8.55 மணிக்கு நாகை வந்தனர்.ஸ்ரீவத்சவா தலைமையில் ஹெலிகாப்டர் மூலம் வந்த இந்த குழுவினர் நாகை ஆயுதப்படை மைதானத்தில் இறங்கினார்கள்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய ஸ்ரீவத்சவா, நிவாரண உதவிகள் உரிய முறையில் கிடைக்க கண்டிப்பாக ஏற்பாடுகள் செய்வோம். தமிழகஅரசின் நிவாரண உதவிகளைப் பார்த்து வருகிறோம். மத்திய அரசுடன் மாநில அரசு உறுதுணையாக இருக்கிறது என்றார்.
பிறகு சுற்றுலா மாளிகையில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சாந்தஷீலா நாயர், நாகை ஆட்சியர் வீரசண்முகமணி, தஞ்சை ஆட்சியர்ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது சேத விவரங்கள் அடங்கிய பட்டியலை மத்தியகுழுவிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதனையடுத்து நாகை நல்லியான் தோட்டம் மற்றும் ஆரியநாட்டு தெருவுக்கு மத்திய குழுவினர்சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் ஆகிய மீனவ கிராமங்களுக்கும், வேளாங்கண்ணிக்கும் சென்று மீட்பு பணிகளைபார்வையிட்டனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்தனர்.
அதனையடுத்து நாகை ஜி.வி.ஆர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறை கேட்டனர். பின்னர் காரைக்கால்,தரங்கம்பாடியில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது பல மீனவர்கள், தாங்கள் இழந்த படகு,வலைகளை மீட்டுத் தரவேண்டும் என்றும், கடற்கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவில்வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அரசிடம் பரிந்துரைப்பதாக மீனவர்களிடம் மத்திய குழுவினர்உறுதியளித்தனர்.
பின்னர் அவர்கள் நாகூர் புறப்பட்டுச் சென்றனர்.
கன்னியாகுமரியில்...:
அதேபோல் கன்னியாகுமரியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலமணக்குடி, கீழமணக்குடி,சின்ன முட்டம் ஆகிய பகுதிகளில் சேதங்களை மதிப்பிட்டனர். குழுவினரிடம் படகுத்துறை மேலாளர் சொர்ணபாண்டியன் சேத விவரங்களை விளக்கிக் கூறினார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர நிறுவனத்திற்குச் சொந்தமான மினிபடகு சேதமடைந்திருந்தையும், படகுத் துறையில் சுற்றுலாப் பயணிகள் நின்றுசெல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் செட் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதையும் பார்த்தனர்.
பின்னர் சேத மதிப்பு குறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். படகுத் துறையில் ரூ.1 கோடி அளவுக்கு சேதம்அடைந்திருப்பதாகவும், ஒரு வாரமாக படகுகள் ஓடாததால் ரூ.20 லட்சம் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் படகுத்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.