வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: மீண்டும் கன மழை ரயில்-விமானங்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை உள்பட வட தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மீண்டும் மிக பலத்தமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.
கன மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் பல பகுதிகளில் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புரசைவாக்கம், அயனாபுரம், கொளத்தூர், ஓட்டேரி, வியாசர்பாடி, மகாகவி நகர், வண்ணாரப் பேட்டை, ராயபுரம், சூளை, எழும்பூர்,எருக்கஞ்சேரி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், முகப்பேர், திருவிக நகர், டிபி சத்திரம், வடபழனி, கோடாம்பாக்கம், அம்பத்தூர்,மதுரவயல், கீழ்பாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கொடுங்கையூர் ஆகிய பகுதிகள் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு மழை வெள்ளத்துடன் சாக்கடையும் கலந்து தெருக்களிலும் வீடுகளிலும் புகுந்துள்ளது. பெரும்பாலான குடிசைப் பகுதிகள்வெள்ளத்தில் மிதக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50,000 பேர் 300 பள்ளிகள், சமூகக் கூடங்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாநகராட்சி உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையம் மிதக்கிறது:
கன மழையால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 8வது பிளாட்பார்ம் வரை தெப்பக் காடாக மாறியுள்ளது. தண்டவாளங்கள் நீரில்மூழ்கிவிட்டன.
இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்கள் கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் மற்றும் பேசின் பிரிட்ஜ் ஆகியஇடங்களிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.
இன்று காலை சென்னைக்கு வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ், சேரண் எக்ஸ்பிரஸ் மற்றும்அரக்கோணம் வழியாக வந்த அனைத்து ரயில்களும் இந்தப் பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டன.
அங்கு ரயிலை விட்டு இறங்கும் மக்கள் தண்ணீரில் புகுந்து தான் வெளியே வேண்டிய நிலை உள்ளது.
ரயில்கள் ரத்து:
அதே போல இன்று காலை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ், ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மைசூர் சதாப்தி ரயில்,சப்தகிரி எக்ஸ்பிரஸ், விஜயவாடா சதாப்தி ரயில், தாதர் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.
இதனால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில் நிலையத்தை அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆட்டோக்கள் மிகக் குறைவாகஓடுவதால் பலரும் வீடு திரும்ப முடியாமல் தத்தளித்தனர்.
யானைக் கவுனி, பேசின் பிரிட்ஜ் ஆகிய ரயில்வே மேம்பாலங்களுக்கு கீழே பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்குபோக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூர் வரும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தன. பாண்டியன்எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகியவை பல இடங்களில்தண்டவளாங்களில் நீர் தேங்கியதால் மிக மெதுவான சென்னை வந்தன.
சென்னை வந்திறங்கிய இந்த ரயில்களின் பயணிகள் வீடு போய்ச் சேர பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
மின்சார ரயில்களும் ரத்து:
தண்டவாளங்கள் நீரில் மூழ்கிப் போனதால் சென்னையில் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிளம்பிச் சென்ற பல ரயில்களும்பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் பணிகளுக்குச் செல்லும் பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
விமான சேவையும் பாதிப்பு:
சாலைகளில் வெள்ளம் காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்தும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல கன மழையால் சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தின் ரன் வேக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும்மேகமூட்டம் மிகக் கடுமையாக இருப்பதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை வந்த பல வெளிநாட்டு விமானங்கள் பெங்களூருக்கும், திருவனந்தபுரத்துக்கும் திருப்பி விடப்பட்டுள்ளன.
கன மழையால் பாண்டிச்சேரியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.