சன் கண்ணை உறுத்தினால் நானா பொறுப்பு?
சென்னை:சன் டிவி மற்றவர்களின் கண்களை உறுத்தினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேள்வி பதில் பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கேள்வி: பெங்களூரில் சன் டிவி இருப்பதால் தான் நீங்கள் காவிரி பிரச்சனையில் விட்டுக் கொடுத்து போவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: சதாமுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே விமர்சித்து வருகிறேன். அமெரிக்காவில் சன் டிவி ஒளிப்பரப்பாகி வருகிறது என்பதால் அமெரிக்காவின் கொடுமைகளை ஆதரித்து விட முடியுமா?
எனக்கும், சன் டிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளேன். ஜெயலலிதாவிற்கும் அவரது நண்பர்களுக்கும் சன் டிவி கண்ணை உறுத்தினால் நான் பொறுப்பல்ல.
கேள்வி: பா.ம.க தலைவர் மணி விடுத்துள்ள அறிக்கையில் சர்ச்சையை வளர்த்துக் கொண்டுபோக மருத்துவர் அய்யா விரும்பவில்லை என்று கூறியிருப்பது பற்றி?
பதில்: அதுதான் என்னுடைய கருத்தும். அவர் அறிக்கையில் நான் வெற்றி கொண்டானின் பேச்சை கண்டிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சிற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கை விட்டிருந்தேன். என்னிடம் புகார் தெரிவிக்க வந்த பாமக உறுப்பினர்களிடமும் தெரிவித்திருக்கிறேன்.
இது மட்டுமல்லாமல்,வெற்றிகொண்டானும் மன்னிப்பு கேட்டுள்ளார். எது எப்படியோ, மணி தெரிவித்தது போல கூட்டணி தர்மத்தை குலைத்திடும் வகையில் யாரும் செயல்படவோ பேட்டியளிக்கவோ கூடாது என தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பேட்டி கேட்டு வரும் பத்திரிக்கையாளர்கள் இதழிலிலே வெளியிட வேண்டும் என்ற அக்கறையை விட இரண்டு தோழமை கட்சிகளுக்கிடையே உள்ள உறவை குலைக்கலாம் என்ற எண்ணத்தோடு வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப நடந்துக் கொள்ளவேண்டும்.
கேள்வி: வார இதழுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், நிதி நிலை அறிக்கையில் விவசாயிக்களுக்கு ஏற்ற உருப்படியான எந்த திட்டமும் இல்லை எனக் கூறியிருப்பது பற்றி?
பதில்: 22 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதுடன், கூட்டுறவு கடனுக்கான வட்டியை கடந்த ஆண்டை விட 9 சதவிகிதம் குறைத்துள்ளது. மேலும் கடனுக்காக ரூ.1628 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுக்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் உற்பத்தி 1100 நேரடி கொள்முதல் நிலையங்களும், நவீன எடை எந்திரங்கள், விவசாய நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டு ரூ.152 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 71,755 ஏழைகளுக்கு 77,177 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று அங்குள்ள விவசாய தொழில் நுட்ப முறைகளை கற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் விவசாயிகளுக்கான திட்டங்கள் அல்ல என்று யாராவது கூறுவாராயின் அவர்களை பற்றி விவசாயிகளே புரிந்துக் கொள்வர்.
கேள்வி: தமிழக அரசின் சார்பில் தொடங்கவிருக்கும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விண்ணபங்கள் வந்துள்ளனவா?
பதில்: எதிர்ப்பார்த்தை விட அதிகமாக வந்துள்ளன. 6 பள்ளிகளுக்கு 1267 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
கேள்வி: திருவாரூர் கோவிலில் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?
பதில்: திருவாரூர் தேரோட்டம் பற்றி மக்கள் மறந்து விட்ட நிலையில் எத்தனையோ ஆண்டுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 1970ம் ஆண்டு சாலை பராமரிப்பு பணிக்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து திருவாரூர் தேர் ஓட்டப்பெற்றது
பல வருடம் விழா நடக்காமல் இருந்த போது கவலைப்படாத பாஜகவினர் இப்போது இந்த நட்சத்திரத்தில் தான் ஓட்டவேண்டும் என போராடப் போவதாக கூறுகிறார்கள்.
1970ம் வருடத்திற்கு பின் 25 முறை விழா நடந்துள்ளது. அதில் 3 முறை இந்த நட்சத்திரத்தில் நடந்தது. 22 முறை நடக்கவில்லை. அப்போதெல்லாம் இந்த பாஜகவினர் எங்கே போனார்கள். இப்போது போராட்டம் நடத்துவது முறையா என சிந்திக்க வேண்டாமா.
கேள்வி: காவிரி பிரச்சனைக்காக 1968ம் வருடம் முதல் பாடுபட்டு வருகிறீர்கள், ஆனால் ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறாரே?
பதில்: உண்மையில் இந்த பிரச்சனையில் துரோகம் செய்தது யாரென்று தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும். நடுவர் மன்ற தீர்ப்பிற்கு கர்நாடகம் கட்டுப்பட போவதில்லை என கர்நாடகத்திற்கு குரல் கொடுத்தது ஜெயலலிதா.
1992ல் விசி.சுக்லா நடுவர் மன்ற இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு குழு அமைப்பது பற்றி ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியதை குப்பையில் போட்டவர் ஜெயலலிதா.
1993ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதம் என நாடகமாடி, அதை தொடர முடியாத நிலையில் மத்திய அரசு கண்காணிப்பு குழு அமைக்க ஒப்புக் கொண்டு விட்டது என பொய்யை சொல்லி உண்ணாவிரதத்தை திரும்ப பெற்றார். ஆனால் 1996 வரை அந்த குழு அமைக்கப்படவில்லை.
கர்நாடகத்தில் சன் டிவி இருப்பதால்தான் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறேன் என்று கூறினால், சன் டிவி எப்போது ஆரம்பிக்கப்பட்டது, காவிரி பிரச்சனை எப்போது தொடங்கியது என்ற உண்மை மக்களுக்கு தெரியாது என புளுகி வருகிறார் என்றுதான் அர்த்தம்.