ராமர் பாலம் உள்ளதா?: சரஸ்வதி மஹால்நூலகத்தில் ஆதாரம் தேடிய டி.ஆர்.பாலு
தஞ்சாவூர்:ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்று தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆய்வு செய்து குறிப்புகளையும், நகலையும் எடுத்துச் சென்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு.
ராமர் பாலம் தொடர்பாக சர்ச்சை வலுத்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி கூறுகையில், ராமர் பாலம் உள்ளது தொடர்பாக தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உள்ளன, வரைபடமும் உள்ளது என்றார்.
இந்த நிலையில் நேற்று திடீரென டி.ஆர்.பாலு சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு வந்தார். காலை 10.30 மணிக்கு வந்த பாலு, சுமார் 4 மணி நேரம் அங்கேயே இருந்து பல்வேறு ஆவணங்களைப் பார்த்தார்.
ராமர் பாலம் தொடர்பாக எந்தெந்த ஆவணங்களில், நூல்களில் கூறப்பட்டுள்ளதோ அதையெல்லாம் எனக்குக் காட்டுங்கள் என்று அவர் நூலக நிர்வாக அதிகாரி சாமி சிவஞானத்திடம் கேட்டார். இதையடுத்து கம்பராமாயணம், வால்மிகி ராமாயனம், மானசராமாயனம், அத்யாத்ம ராமாயமனம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல் தொகுப்புகள் அவரிடம் காட்டப்பட்டன.
இவற்றில் பெரும்பாலான நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. அவற்றை சமஸ்கிருத பண்டிதர் வீரராகவன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்.
இந்த நூல் தொகுப்புகளிலிருந்து தனக்குத் தேவையான விஷயங்களை குறிப்பெடுத்துக் கொண்டார் பாலு. பின்னர் சில பகுதிகளை ஜெராக்ஸ் பிரதியும் எடுத்துக் கொண்டார். ராமர் பாலம் தொடர்பான பழங்கால வரைபடங்களையும் அவர் பார்வையிட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். பின்னர் பிற்பகல் இரண்டரை மணியளவில் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாலு கூறுகையில், 23ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளேன். அதற்குத் தேவையான தகவல்களை சேகரிக்க இங்கு வந்தேன் என்றார்.
இதற்கிடையே சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ராமர் பாலம் தொடர்பான ஆதாரங்களை அழிக்க பாலு முயன்றதாக ஜெயா டிவி செய்தி வெளியிட்டது. இது குறித்து பாலுவிடம் கேட்டபோது, இந்த நூலகம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. ஆயிரக்கணக்கானோர் தினசரி இங்கு வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் எப்படி நூல்களில் உள்ள ஆதாரத்தை அழிக்க முடியும். அவ்வாறு கூறுபவர்கள் தேச துரோகிகள் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications