அர்ஜுன் சிங்கிற்கு காந்தி விருது
சென்னை :மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும் சமூகநீதிக்கான காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மதுரை காந்தி நினைவாலயத்தின் தலைவர் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உழுபவனுக்கே நிலவுடமை இயக்கத் தலைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் அர்ஜுன் சிங் பேசியபோது,
தமிழ்நாடு எப்போதும் தேசிய அளவிலான பெரும் தலைவர்களை அளித்து வருகிறது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும், அதை பரப்புவதிலும் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழ்நாட்டில் காந்தியின் சமூக பொருளாதார முன்னேற்ற திட்டங்களை பரப்புவதில் ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் சிறப்பாக செய்தனர். திராவிட இயக்கங்களில் பெரியார், அண்ணா இந்த செயல்பாட்டில் சிறந்த தலைவர்களாக இருந்தனர். முதல்வர் கருணாநிதி இதில் மிகச் சிறந்த தலைவராக இருக்கின்றார்.
காந்தியின் கொள்கைகளை குழந்தை பருவத்திலிருந்தே பள்ளிக் குழந்தைகளுக்கு போதித்து, அவர்களுக்கு சமாதானத்தையும், ஒற்றுமையும் கடைப்பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நிலைகளில் வன்முறையற்ற தன்மையை நிலைநாட்ட அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
காந்தியின் கனவுகளான அமைதி, சமாதானம், அகிம்சை ஆகியவற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதே நாம் காந்திக்கு செய்யும் மரியாதையாகும் என்றார்.
பின்னர் பேசிய முன்னாள் நீதிபதி மோகன்,
குடியரசு தலைவர் பதவி தேர்தல் வருகிறது. இந்த பதவியை அர்ஜுன் சிங் வேண்டாம் என மறுக்க வேண்டாம். உங்களை விட வேறு ஒருவர் சிறந்த குடியரசு தலைவராக வர முடியாது என்றார்.