பிளஸ் டூ-மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்றால் இலவச கம்ப்யூட்டர்
சென்னை: சென்னையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ -மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பரிசாக வழங்கப்படும் என மேயர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள 27 மாநகராட்சி மேல் நிலைப் பள்ளிகளில்
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1000க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவியருக்கும், 10ம் வகுப்புத் பொதுத் தேர்வில் 500க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
அதே போல அதிக தேர்ச்சி விகிதம் பெறும் முதல் மூன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளின் பாட ஆசிரியர்களுக்கு தலா ரூ.500 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ -மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பரிசாக வழங்கப்படும்.
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்:
மாநகராட்சிப் பெண்கள் பள்ளிகளில் பயின்று வரும் மாணவியர்களின் உடல் ஆரோக்கியம் காக்கும் வகையிலும் சுகாதாரம் பேணும் வகையிலும், மாணவியர்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.
ஆங்கில மொழியை 6, 7, 8ம் வகுப்பு மாணவ-மாணவியர் எளிய நடையில் பேசி பழகிட ஆங்கில மொழிப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவு நேர காப்பகம்:
ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பாற்ற இடங்களில் உறங்குவதால் அக்குழந்தைகள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் இரவில் பாதுகாப்பாகத் தங்கி உறங்க இரவு நேர காப்பகம் உருவாக்கப்படு்ம்.
மயானங்களில் இலவச சேவை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மயான பூமிகளில் தற்பொழுது புதைப்பதற்கு ரூ. 225ம், மின் எரியூட்டு தகனத்திற்கு ரூ. 250ம், கட்டை, வரட்டி மூலம் எரிப்பதற்கு ரூ. 600ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இனிமேல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மயானகங்ளிலும், தகனம் அல்லது அடக்கம் செய்வது எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக செய்யப்படும். திறந்த வெளியில் உடலை தகனம் செய்வது தடை செய்யப்படும்.
அதே போல இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் வரை மின் குளிர்சாதன அமரர் பெட்டியில் வைத்து பாதுகாக்க வசதியாக சென்னை மாநகராட்சி மூலம் இலவசமாக மின் குளிர்சாதன அமரர் பெட்டிகள் வழங்கப்படும்.
பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதத்தை தவிர்க்க, எளிதில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறுவதற்காக இணைய தளத்தின் மூலம் சென்னை மாநகராட்சியில் பதிவாகியுள்ள பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கான சான்றிதழ்களை உலகின் எப் பகுதியிலிருந்தும் இலவசமாக எடுத்துக் கொள்ள வசதி செய்யப்படும்.
மார்பகப் புற்று நோய் கண்டறியும் கருவி முதன் முதலாக மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பெண்களைப் பாதிக்கும் புற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறியும் சாதனமான சோனோ மேமோகிராம் வட சென்னைக்கு ஒன்றும், தென் சென்னைக்கு ஒன்றும் வாங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.