அரபிக் கடலில் புதிய புயல் சின்னம்-தென் தமிழகத்தில் மழை கொட்டுகிறது
இதனால் தென் மாவட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு்ள்ளது. குளங்கள், கண்மாய்கள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் நாசமடைந்துள்ளன. இந் நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்து வந்தது. பின்னர் அது பலவீனமடைந்தது.
இந் நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தீவிரமடைந்து வருகிறது.
கன்னியாகுமரி அருகே தென் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலத்தால் தென் தமிழகத்தில் மழை கொட்டி வருகிறது.
இதனால் தென் மாவட்டங்களில் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பல ஆறுகளி் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் வெள்ளம் தேங்கி ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இந் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுவை மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
பயிர்கள் நாசம்-இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
ஒரு வாரமாக தொடர்ந்து வரும் மழையில் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களை மழை புரட்டிப் போட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடைவிடாமல் விடிய விடிய கன மழை கொட்டி வருகிறது.
கன மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தென் மாவட்ட அணைகள் அனைத்திலும் நீர் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு பகுதிகளில் வறண்டு கிடந்த குளங்கள் அனைத்தும் ஒரே நாளில் நிரம்பிவிட்டன. நாங்குநேரியில் பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது.
களக்காட்டில் நாங்குநேரியன் கால்வாய் உடைந்து வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
தூத்துக்குடி உப்பளங்களுக்கு பாதிப்பு:
தூத்துக்குடியில் 130 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மீளவிட்டான் சீனாவான கண்மாய் உடைந்து நூற்றுக்கணக்கான விடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதே போல தூத்துக்குடி ரயில்வே குடியிருப்பிலும் வெள்ளம் புகுந்ததில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
பாவூர்சத்திரம் அருகே வடக்கு பூலாங்குளத்தில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
ஏரல் பகுதியில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் மழையால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
ஏரல் வாழவல்லான், கூவரிகாடு, பெருங்குளம், மங்களகுறிச்சி, சேதுக்குவாய்ந்தன், குரும்பூர் பகுதிகளில் நெல்வயல்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. அறுவடைக்கு இயந்திரம் கிடைக்காமலும், ஆட்கள் கிடைக்காமலும் காத்திருந்த நிலையில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் பயிர்கள் சாய்ந்து நீரில் முழ்கியுள்ளன.
குற்றாலம் அருவியில் குளிக்க தடை
குற்றாலத்தில் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுவதால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதே போல குற்றாலத்தில் பிற அருவிகளில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி கிராம்பு தேக்கம்
தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு பகுதியில் மழை காரணமாக ராஜா தோட்டம் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினரின் பணம் கொழிக்கும் விவசாயமான கிராம்பு தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி அளவில் 100 டன் கிராம்பு பறித்தும் காய வைக்க முடியாமல் மழை காரணமாக அழுகி நாசமடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.360க்கு விற்கப்பட்ட கிராம்பு தற்போது ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழையினால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம்பு விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மதுரையில் விடிய விடிய மழை:
மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அதே போல திருச்சி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
அதே போல கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகிலும் கன மழை பெய்து வருவதால் பல தொழில் நிறுவனங்களுக்கு கூலியாட்கள் வரவில்லை. இதனால் இப் பகுதிகளில் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமராவதி, காவிரி ஆறுகளில் தண்ணீர் இரு கரை வரை சென்ற வண்ணம் உள்ளது.
கடும் மழையால் மாநிலம் முழுவதுமே காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது.
நிவாரணம்-முதல்வர் உத்தரவு:
இந் நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள முதல்வர் கருணாநிதி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பயிர்களுக்கு விளைந்த சேதங்களை கணக்கிட்டு அறிக்கை அனுப்பவும், மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் பணியாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க நிவாரணம் முறையாக விரைவில் சென்றடைய ஆவன செய்ய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.