ஒட்டுக்கேட்பு: ஜாபர் சேட்-சங்கர் ஜூவால் மீது ராமதாஸ் பாய்ச்சல்
செங்கல்பட்டு: தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதில் உளவுத்துறை அதிகாரிகளான ஜாபர் சேட்டும், சங்கர்ஜூவாலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டுளளனர். ஜாபர் சேட் இதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். எனவே அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
செங்கல்பட்டில், டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பல அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தொலைபேசியும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணியின் தொலைபேசி உள்ளிட்ட சிலரது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறினேன்.
இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னைப் புறநகரில் இந்த நிறுவனம் இயங்குகிறது. இதன் பெயர் டி3டி சாப்ட்வேர் என்பதாகும்.
இந்த நிறுவனம் தன்னை ஒட்டுக்கேட்பதில் நிபுணத்துவம் பெற்றதாக விளம்பரப்படுத்திக் கொள்கிறது. தனது வாடிக்கையாளர்கள் யார் என்பதையும் தனது இணையதளத்தில் அது தெரிவித்துள்ளது. அதில், தமிழககாவல்துறை, உளவப் பிரிவு, சென்னை, சேலம் நகர காவல்துறை, போதைப் பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் ஆகியோரை அது குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் முத்திரையையும், காவல்துறை முத்திரையயும் அது தனது விளம்பரத்தில் இடம்பெறச் செய்துள்ளது.
தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதில் மிகவும் நிபுணர் மம்தா சர்மா. இவர் வேறு யாருமல்ல, உளவுத்துறை அதிகாரி சங்கர் ஜூவாலின் மனைவிதான். அதேபோல நாராயணயாதவ், லட்சுமிபிரியா ஆகியோரும் ஒட்டுக்கேட்பதில் ஜாம்பவான்கள்.
டி3டி சாப்ட்வேர் நிறுவனத்தின் பதிவு ஆதாரத்தில், உளவுத்துறை அதிகாரி சங்கர் ஜூவாலின் வீட்டு முகவரி தரப்பட்டுள்ளது. எனவே இந்த விவாகரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும்.
தொலைபேசி ஒட்டுக்கேட்புக்கு காரணமாக இருப்பவர் ஜாபர்சேட்தான். அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். நீதிபதி சண்முகம் கமிஷனில் எங்களது புகாரை நீதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
உளவுத்துறைக்கு தலைமை தாங்கும் அதிகாரிகள் இதற்கான உத்தரவை வாய்மொழியாக பிறப்பித்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன. முதல்-அமைச்சருக்கு தெரியாமல் இவ்வாறு நடைபெறுகிறதா?
இந்திய அரசியல் சட்டத்தின்படி தொலைபேசியை ஒட்டு கேட்பது அடிப்படை உரிமையை மீறுகின்ற செயல் ஆகும். தொலைபேசிகளை ஒட்டு கேட்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதன்படிதான் நடக்க வேண்டும்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் அதிகம் ஆகும். இதை எதிர்த்து தமிழக மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. எனவே கல்வி கட்டண உயர்வை குறைக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்துக்கு மேல் வாங்கவில்லை என்று ஒவ்வொரு கல்லூரியிலும் எழுதி வைக்க வேண்டும். இதற்கு அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்காத வங்கிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வங்கிகளை இழுத்து மூடவேண்டும். சமச்சீர் கல்வி முறை என்ன ஆனது என்று தெரியவில்லை. சமதர்ம சமுதாயம் உருவாகும் வகையில் இந்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்.
குடிக்கு எதிராக பெரும் போராட்டம்:
தமிழ்நாட்டில் இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்ற நிலை உருவாகும். குடிப்பழக்கத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். எந்த தேதியில் போராட்டம், என்ன மாதிரியான போராட்டம் என்பது பற்றிய விவரம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications