தேவாலயங்கள் மீது தாக்குதல்-ராமதாஸ், சரத்குமார் கண்டனம்
சென்னை: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதச்சார்பற்ற இந்தியாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. மத சகிப்புத் தன்மையற்ற, மத வெறியர்களால் பாஜக ஆட்சி நடத்தும் ஒரிஸ்ஸாவில் அரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் அக்கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகத்திற்கு பரவியிருக்கிறது.
அதோடு நிற்காமல் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பரவி தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தலை தூக்கியிருக்கும் தாக்குதல் மேலும் பரவிவிடாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு மாநிலங்களிலும் மதத் தீவிரவாத சக்திகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை பார்க்கையில், இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை செயல் என்பது தெரிகிறது. இத்தகைய தாக்குதல்களால் மத உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் பெற மதத் தீவிரவாதிகள் முயற்சிக்கிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் இருந்து மதத் தீவிரவாதிகளின் கோபமூட்டும் நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே கிள்ளியெறிய வேண்டும். நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் மதத் தீவரவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சரத் கண்டனம்:
சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூலம் கல்வி சேவையில் கிறிஸ்தவ அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் மீது சிலர் திட்டமிட்டு வன்முறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்கு உரியது. மத உணர்வை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.
ஒரிஸ்ஸாவில் அமைதி திரும்புகிற நிலையில், இப்போது கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழ்நாட்டில் பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரிலும், நேற்று கேரளாவிலும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
மதவாதத்தை அடிப்படையாக் கொண்டு ஒருவர் மீது, ஒருவர் தாக்குதல் தொடுப்பதும் தீவிரவாதம்தான். இதை தவறு செய்பவர்கள் உணர வேண்டும். நாடு அமைதியாக இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
மக்களின் அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு தீயசக்தியையும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.