'புலிகளாய் மாறுவோம்'-வி.சி. போஸ்டரால் பரபரப்பு
திசையன்விளை: தமிழினத்திற்கு தடைகள் வந்தால் அதை தகர்த்து எறிவோம். விடுதலை சிறுத்தைகள் விடுதலை புலிகளாய் மாறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திசையன்விளை பழைய பஸ் ஸ்டாண்ட் நேருஜி கலையரங்கம் அருகில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் இரணியன் பெயரில் போஸ்டர் ஒன்று ஓட்டப்பட்டுள்ளது.
அதில், எழுச்சி கொண்டு ஆர்ப்பரிப்போம், தமிழனத்தை அங்கீகரிப்போம், இந்திய அரசே இலங்கையில் போரை தடுத்து நிறுத்து. உடனே அமைதி பேச்சு நடத்து.
சாவின் விழிம்பில் உள்ள 5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்று. தலைவர் திருமாவளவன் உயிருக்கு பங்கம் ஏற்பட்டால் 6 கோடி தமிழர்களும் அலை அலையாக சிறை செல்வோம்.
தமிழர்களாய் அணி திரள்வோம், சிறுத்தைகளாய் சீறி எழுவோம். எங்கள் தமிழினம் அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். தமிழினத்தின் பேராளிகளே உடனே எழுங்கள். சங்க தமிழ் கொண்ட சிங்க தமிழனே சிறுத்தையாய் சீறி எழு.
சிங்களர்கள் சில, 6 கோடி தமிழர்கள் நாம். அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், நாம் சூரர்கள். தமிழினத்திற்கு எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தாண்டுவோம். இல்லையெனில் தகர்த்து எறிவோம்.
விடுதலை சிறுத்தைகள் விடுதலை புலிகளாய் மாறுவோம். எச்சரிக்கிறோம் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.