போராட்டத்தை தீவிரப்படுத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடக்கம்
இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தவும், இந்த விவகாரத்தில் நடந்து வரும் போராட்டங்களை தீவிரப்படுத்துவது தொடர்பாகவம், ஒருமித்த கருத்தை உருவாக்குவது குறித்தும் விவாதிக்க சென்னையில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்iனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சி.சத்யா, வக்கீல் கே.ராதாகிருஷ்ணன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், நிரந்தர அமைதி ஏற்படவும் தமிழகத்தில் என்னென்ன போராட்டங்களை நடத்துவது என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.
அதன் பிறகு, தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கலந்து ஆலோசித்ததில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை வெளியிடுவதற்காக அந்த அமைப்பு இருக்கும்.
ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன்
அந்த அமைப்பில் பங்கேற்பதற்காக மற்றவர்களையும் அழைக்க வேண்டும். இப்போது இங்கே வந்திருப்பவர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இப்போதிருந்து எங்களுடைய நடவடிக்கைகளை தொடங்குகிறோம். அதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க, பழ.நெடுமாறனை வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றார்.
தொடர்ந்து பழ. நெடுமாறன் கூறுகையில், ஜனவரி 30-ந் தேதி காந்தி மறைந்த நாளில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்னால், இங்கே இருக்கின்ற 5 பேரும், மற்றும் இங்கே வர முடியாமல் இருக்க கூடிய மற்ற தலைவர்கள், அமைப்புகள் அனைவரையும் அழைத்து, இலங்கையில் எங்களுடைய சகோதர தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற அந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதை தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் கையில் கறுப்பு கொடி ஏந்தி, அமைதியாக அங்கே மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் எங்களுடைய மவுன விரதத்தை நடத்துகிறோம்.
31-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் ஒரு மண்டபத்தில், ஒரு விரிவான கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் வகுக்க இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து சமுதாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், வக்கீல்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் சங்கம், அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், திரைப்பட நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர் சங்கம், பத்திரிகையாளர் சங்கம், விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான ஆலோசனைக்கூட்டத்தை நடத்தி, அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை அந்த கூட்டத்தில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.
தொடர்ந்து எங்களுடைய இந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களை திரட்டி நாங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அது பற்றி எல்லோரிடமும் பேசிவிட்டு அறிவிக்கப்படும் என்றார்.