தா.பாண்டியன் பாதுகாப்பு-கமிஷ்னர் விளக்கம்
சென்னை: போலீஸ் பாதுகாப்பை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஏற்காததால்தான் அவரது வீட்டுக்குப் பாதுகாப்பு தரப்படவில்லை. தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தா.பாண்டியனின் சென்னை அண்ணா நகர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரும், ஒரு ஸ்கூட்டியும் நேற்று முன்தினம் இரவு சில விஷமிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பாண்டியன் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை என்ற புகாரும் எழு்நதது.
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தா.பாண்டியன் வீட்டில் கார் எரிந்த சம்பவம் தொடர்பாக அவரது கார் டிரைவர் ராஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 3.50 மணியளவில் கார் நல்ல நிலையில் இருந்துள்ளதை அப்பகுதியின் காவலாளி அர்ஜூனன் என்பவர் பார்த்துள்ளார். அதிகாலை 4.20 மணிக்கு காரின் பின்பக்கம் தீ எரிய தொடங்கியுள்ளது.
இதுபற்றி போலீஸ் விசாரணையும், தடய அறிவியல் நிபுணர்கள் விசாரணையும் நடந்து வருகிறது. மாநில பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வு டி.ஐ.ஜி. 24.11.2007 அன்று தா.பாண்டியனுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு உங்கள் இசைவை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு, தா.பாண்டியன் 26.11.2007 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எனக்கும், நல்லகண்ணுவுக்கும் பாதுகாப்பு தர முன்வந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தோழர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது.
பொதுமக்களின் வரிபணத்தில் மக்களுக்காக காவல் பணியை நிறைவேற்ற வேண்டிய காவல்துறையை சேர்ந்த சிலரை எங்களை காப்பாற்றிக்கொள்ள காவலாக கேட்பது சரியாக இருக்காது என்றும் கருதுகிறோம். எனவே, எங்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தா.பாண்டியன் குறிப்பிட்டிருந்தார்.
இருந்தாலும், மீண்டும் பாதுகாப்பு துறை டி.ஐ.ஜி., தா.பாண்டியனுக்கு 8.1.2008 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் தடுப்பதற்காகவும், பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதியும், அரசு எடுக்கும் நடவடிக்கையின் நோக்கம் கருதியும், உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்து அரசு வழங்கும் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த கடிதத்திற்கு, தா.பாண்டியனிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை வரவில்லை.
இப்போது கார் எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன், தர்மபுரியில் இருந்த தா.பாண்டியனை தொடர்பு கொண்டு பேசி, அதன் அடிப்படையில் அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.