மக்களவை தொகுதி அறிமுகம்-37: தென்காசி (தனி)
இத்தொகுதியில் 1957 முதல் 1991 வரை நடைபெற்ற 9 பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இங்கு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று வந்தது. 96ம் ஆண்டு மட்டும் தாமகா வெற்றி பெற்றது.
காங்கிரஸின் கோட்டையாக வர்ணிக்கப்பெற்ற இத்தொகுதி 1998ம் ஆண்டுக்கு பின் இருமுறை அதிமுக வசமும், ஒரு முறை சிபிஐ வசமும் மாறியது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம் இத்தொகுதியில் 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதியில் 1984, 89 ஆகிய இருதேர்தல்களில் சிபிஎம், 1991ல் திமுக, 1996ல் காங்கிரஸ், 1998ல் தாமகா, 1999ல் பாஜக, 2004ல் அதி்முக ஆகிய கட்சிகள் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளன.
இத்தொகுதியில் முன்பு தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இருத் தொகுதிகள் (தனி) தொகுதிகளாகும். தொகுதி மறு சீரமைப்பின் கீழ் தற்போது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் சேர்ந்துள்ளன.
இதில் ஸ்ரீவி்ல்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 3 தொகுதிகள் தனி தொகுதிகள் ஆகும்.
அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் தென்காசி பாராளுமன்ற தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அப்பாத்துரை வெற்றி பெற்றார். அப்போது திமுக தலைமையில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் என அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இருந்தன.
இப்போது மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகியவை அதிமுக அணியில் உள்ளன.
சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் மதிமுகவுக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு. இதனால் கடந்த சட்டசபை தேர்தல்களில் அதிமுக, மதிமுக கூட்டணி அமைத்து 3 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தென்காசி, கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமசாமி வெற்றி பெற்றார். தற்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசியை தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என அதிமுக கூட்டணியினர் தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளனர்.
ஆனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் எங்கள் சாதனைகளை தொடர மக்கள் ஆதரவுடன் தென்காசி தொகுதியை கைப்பற்றி விடுவோம் என்று தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளனர்.
இதுபோக மற்ற கூட்டணி கட்சிகளும் இந்த தேர்தலில் பங்கு பெற்று வெற்றி பெற களம் இறங்கியுள்ளன. கூட்டணி இறுதி வடிவம் பெற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் சூடு பிடிக்கும்.
சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை ராஜபாளையம், சங்கரன்கோவில் தொகுதிகளை அதிமுகவும், தென்காசியை திமுகவும், ஸ்ரீவி்ல்லிபுத்தூரை சிபிஐயும், வாசுதேவநல்லுரை மதிமுகவும், கடையநல்லூரை காங்கிரஸ் கட்சியும் வைத்துள்ளன.
கடந்த தேர்தல் நிலவரம்
அப்பாத்துரை (சிபிஐ) - 3,48,000
முருகேசன் (அதிமுக) - 2,25,824
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 1,01,122
வெற்றி வித்தியாசம் - 1,22,176 வாக்குகள்
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1975 - சங்கரபாண்டியன் - காங்கிரஸ்
1962 - சாமி - காங்கிரஸ்
1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரஸ்
1971 - செல்லச்சாமி - காங்கிரஸ்
1977 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1980 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1984 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1989 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1991 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1996 - எம்.அருணாச்சலம் - காங்கிரஸ்
1998 - முருகேசன்-அதிமுக
2004 - அப்பாத்துரை- சிபிஐ