திமுகவுக்கு உதயநிதியின் இமெயில் பிரசாரம்
சென்னை: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, திமுகவுக்கு வாக்களிக்குமாறு இமெயில் மூலம் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினின் இணையதளம் ஏற்கனவே பிரபலமாகியுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் அவர் வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். எம்.கே.எஸ். தொண்டர்கள் என்ற பெயரில் 15 ஆயிரத்து 442 இளைஞர்களை அவர் நியமித்துள்ளார்.
எம்.கே.எஸ். என்பது மு.க.ஸ்டாலின் என்பதன் சுருக்கமாகும். கடந்த ஒரு மாதமாக இவர்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் நன்கு படித்து தகவல் தொழில்நுட்பத்துறை, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் இளைஞர்கள் ஆவர். அனைவரும் மு.க.ஸ்டாலினின் இணையதளத்திற்கு தொடர்ந்து விசிட் செய்பவர்கள் ஆவர்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக இமெயில் மூலம் பிரசாரம் செய்யவுள்ளார் உதயநிதி. இதுகுறித்து உதயநிதி கூறுகையில், போட்டோஷாப் மூலம் திமுக அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும் விளக்கி, அவற்றை இ மெயில் மூலம் அனுப்பவுள்ளோம்.
இந்தப் பணியை எங்களது எம்.கே.எஸ். தொண்டர்கள் மேற்கொள்வார்கள். இவர்கள் தங்கது நண்பர்கள், சக பணியாளர்களுக்கு இந்த போட்டோஷாப் விளக்க பிரசார மெயிலை அனுப்புவார்கள்.
மேலும் தங்களது உறவினர்கள் மத்தியிலும் இவர்கள் பிரசாரம் மேற்கொள்வார்கள்.
கடந்த 2004ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நானே இவ்வாறு இமெயில் மூலம் பலருக்கு திமுகவுக்கு ஆதரவு கோரி மெயில் அனுப்பினேன் என்றார்.
மு.க.ஸ்டாலினின் இணையதளத்திற்கு (www.mkstalin.net) தொடர்ந்து வருவோரிலிருந்து இந்த எம்.கே.எஸ். தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனராம்.
இந்த இணையதளத்தை உருவாக்கியவர் திமுக இளைஞர் அணியின் துணைச் செயலாளரான ஜின்னா முகம்மது. இவர்தான் எம்.கே.எஸ். தொண்டர்களையும் திரட்ட உதவியுள்ளார்.
விரைவில் போட்டோஷாப் விளக்கத்தை உதயநிதி அளிக்கவுள்ளார். அதன் பின்னர் மெயில்கள் மூலம் அனுப்பவிருப்பதாக தொண்டர்களில் ஒருவரான தாமோதரன் என்பவர் தெரிவித்தார். இவர் உயர்நீதிமன்ற வக்கீல் ஆவார்.