வன்னியர் மாஜி ஐஏஎஸ்-ஐபிஎஸ்கள் திமுகவுக்கு ஆதரவு
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கே.பொன்னுசாமி, நா.ஆதிமூலம், எம்.கோபாலகிருஷ்ணன், இ.தசரதன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி பி.பாண்டியன், ஓய்வு பெற்ற அரசு இணைச் செயலாளர் டி.ஆர்.மனோகரன், முன்னாள் இணை இயக்குனர் டி.டி.மணி, பொதுப்பணித் துறை முன்னாள் கண்காணிப்புப் பொறியாளர் சி.சுப்பிரமணியன், முன்னாள் தலைமைப் பொறியாளர் கே.சுதந்திரன், சமூகநலச் சங்க தலைமை நிலைய செயலாளர் சி.பாலசுந்தரம் ஆகியோர் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் தாங்கள் முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், மிகவும் பின்தங்கிய வன்னிய சமுதாயத்திற்கு அவ்வப்போது பல உயர் பதவிகளைத் தந்து அதனால் இந்தச் சமுதாயம் உயர்வடைய தங்களால் உதவி செய்யப்பட்டு உள்ளது.
வன்னியர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு தங்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஏ.என்.சட்டநாதன் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை 31 சதவீதமாக மாற்றி அமைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
வன்னிய சமுதாயத்தில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கூடுதலாக மேலும் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-1-ல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்.
வன்னிய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் வன்னியர் பொது சொத்து வாரியம் உருவாக்கியதற்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்தியில் மத சார்பற்ற ஆட்சி அமைய உங்கள் தலைமையில் அமைந்துள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதோடு, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் உள்ள மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வன்னியர்கள் முழு ஆதரவு அளிப்போம் என்று தங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.