இலங்கை போர் குற்றம்-விசாரிக்க ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை
இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த 3 லட்சம் தமிழர்கள் போரினால் இடம் பெயர்ந்து அகதிகளாக அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சந்தித்து வரும் மனித உரிமை பாதிப்புகள் குறித்து விவாதிக்க ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் (UNHCR ) ஜெனீவாவி்ல் நடக்கிறது.
இந்த அமைப்பில் உள்ள 47 நாடுகளில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெர்லாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய 17 நாடுகள் விடுத்த கோரிக்கையின் பேரில் இக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சார்பில் ஸ்விட்சர்லாந்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.
அதில், இலங்கையில் இடம் பெயர்ந்து அரசு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத அனுமதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து மனித உரிமை ஆணையக் கூட்டம் அவரசமாகக் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய நவி பிள்ளை, இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் செய்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசும், புலிகளும் அப்பாவி மக்கள் மீது ஏராளமான கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டனர் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன. இதனால் இது குறித்து சர்வதேச சமுதாயம் முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
போர் என்ற பெயரில் டிசம்பர் மாதம் முதல் நடந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இடம் பெயர்ந்து வாழும் 3 லட்சம் தமிழர்களை எந்த அடிப்படை வசதியும் இல்லாமலம முகாம்களில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது மிகப் பெரிய கொடுமை.
அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்துப் பேசிய மனித உரிமைகள் மற்றும் வறுமைப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரியான மெக்டேலனா செபுல்வடா பேசுகையில்,
இலங்கையில் சி்க்கல் தீர வேண்டுமானால் அங்கு என்ன நடந்தது என்பதை முதலில் நாம் முழுமையாக அறிய வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் போர் குற்றங்கள் குறித்து உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.
முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் நிலையை அறிய சர்வதேச மீடியாக்களை இலங்கை அங்கு அனுமதிக்க வேண்டும். அங்கிருந்து வெளியேற விரும்பும் தமிழர்களை உடனே அரசு விடுவிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்துப் பேசிய இலங்கையின் மனித உரிமைத்துறை அமைச்சர் மொகிந்தா சமரசிங்கே, தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுவது தவறு. அங்குள்ள 2.5 லட்சம் தமிழர்களும் எங்களது குடிமக்கள். அவர்களை புலிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களை ராணுவம் மீட்டு இப்போது அரசு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறது. அங்கு பட்டினியால் யாரும் வாடவில்லை என்றார்.
ஆனால், தமிழர்கள் சார்பில் ஆஜரான சில அமைப்பினர் பேசுகையில், அரசு சொல்வதில் உண்மையில்லை. போரை வென்றுவிட்டதாக இலங்கை கூறுகிறது. ஆனால், அவர்கள் அமைதியை வெல்லவில்லை. அங்கு அமைதி நீடிக்க வேண்டுமானால் சிங்கள அரசு முதலில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றனர்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை அரசின் சார்பில் ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு நிவாரணத்தை இலங்கை அரசே வழங்கும், இதற்கு ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும், இலங்கை உள் நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதில் இலங்கையின் தீர்மானத்தை சீனாவும் இந்தியாவும் ஆதரிப்பது தான் கொடுமையான விஷயமாகும்.