கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம் - ஜெகத்ரட்சகன் கல்லூரி மீது நடவடிக்கை வருகிறுது

ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளைக்குச் சொந்தமானது இந்த பாலாஜி மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரி சென்னை அருகே பள்ளிக்கரணையில் உள்ளது.
இங்கு லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ன. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து இதுகுறித்து விளக்கம் கேட்டு ஜூன் 4ம் தேதி தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு பாலாஜி மருத்துவக் கல்லூரி விளக்கம் அளிக்கவில்லை.
இதையடுத்து ஜூன் 11ம் தேதி மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சனிக்கிழமைக்குள் (நேற்றைக்குள்) பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கும் பதில் வரவில்லை.
இதேபோல சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு நேற்று அந்த பல்கலைக்கழகம் பதிலளித்து விட்டது. இதுதொடர்பாக பல்கலைக்கழக அளவில் விசாரணை நடந்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
இருப்பினும் பாலாஜி கல்லூரி இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை.
இதையடுத்து பாலாஜி மருத்துவக் கல்லூரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் தீர்மானித்துள்ளதாம்.
இதுகுறித்து இயக்குநர் டாக்டர் எஸ்.விநாயகம் கூறுகையில், ராமச்சந்திரா பல்கலைக்கழகம் மட்டுமே இதுவரை பதிலளித்துள்ளது. இதை அரசுக்கு அனுப்பி வைப்போம்.
அதேபோல பதில் அனுப்பாத பாலாஜி மருத்துவக் கல்லூரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அரசுக்குப் பரிந்துரைப்போம் என்றார்.
மாநில சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில், அரசிடம் சட்ட ஆலோசனை கேட்டு திங்கள்கிழமை முதல் விசாரணையைத் தொடங்குவோம். தவறு செய்த கல்லூரிகளின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்த அதிகாரிகளுக்கு ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.
மேலும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications