தமிழகத்தில் 8 ஸ்வைன் ப்ளூ சோதனை கூடங்கள்
உலகை மிரட்டிய பன்றி காய்ச்சலை தற்போது இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதுவரை 23 பேர்கள் பலியாகியுள்ளனர். சென்னையில் 4 வயது சிறுவன் பலியானான். தமிழகத்தில் 57 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பலர் மக்கள் சென்னை அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பன்றி காய்ச்சல் சோதனை செய்து கொள்ளும் வசதி சென்னை கிண்டியில் கிங் பரிசோதனை கூடத்திலும், வேலூர் மருத்துவ கல்லூரியிலும் மட்டுமே இருக்கிறது.
பரிசோதனைக்கு அலைமோதும் கூட்டம்...
பன்றிகாய்ச்சல் பீதி காரணமாக மக்கள் லேசாக தும்மினால் கூட பயந்து சோதனை கூடத்துக்கு வந்து விடுகின்றனர். இதனால் கிங் பரிசோதனை கூடத்தில் ஏகப்பட்ட கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட தூரத்துக்கு முகமுடி அணிந்தவாறு வரிசையில் நிற்கின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக மக்கள் காலை 7 மணிக்கே சோதனைக்கு வந்துவிடுவதால், வெறிச்சோடி கிடக்கும் இப்பகுதி செம பிசியாகிவிட்டது. மேலும், கூட்டத்துக்கு ஏற்ப இந்த ஆய்வு கூடத்தில் பணியாளர்கள் இல்லாததால் பரிசோதனை முடிவுகளை உடனடியாக பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
தற்போது அங்கு 18 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். கூட்ட நெருக்கடி காரணமாக அதிக நேரம் உழைத்து வருகின்றனர். மற்ற ஊழியர்கள் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு மூன்று நாட்கள் ஆகியும் பரிசோதனை முடிவு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேலும் சில பரிசோதனை கூடங்களை திறக்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேலும் 8 பரிசோதனை கூடங்களை திறக்கவிருக்கிறது.
சுகாதார துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறுகையில்,
தனியார் பரிசோதனை கூடங்கள் சிலவற்றுக்கு அனுமதி கொடுப்பது குறித்து யோசித்து வருகிறோம். விரைவில் அவர்களை பார்வையிடுவோம். அவை திருப்திகரமாக இருந்தால் அனுமதி கொடுக்கப்படும். அதன் பின்னர் அங்கு சோதனை செய்யப்படும்.
மேலும், சென்னை கிங் சோதனை கூடத்தில் பெரும் கூட்டம் இருப்பதால் தமிழகத்தில் மேலும் 8 இடங்களில் பரிசோதனை கூடங்களை அமைக்கவிருக்கிறோம்.
கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலியில் ஒரு மாதத்துக்குள் தலா ஒரு பன்றி காய்ச்சல் பரிசோதனை கூடங்களை நிறுவ இருக்கிறது. சென்னையில் மேலும் 4 அமைக்கப்படும். மழை காலத்தில் இந்த நோய் வேகமாக பரவலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.
இதற்காக சென்னையில் ஹைடக் லேபராட்டரிஸ், பாரத் ஸ்கேன்ஸ், அப்பலோ மருத்துவமனை, டையக்னஸ்டிக் சர்வீஸ் ஆகிய பரிசோதனை கூடங்களிலும், கோயம்புத்தூரில் மைக்ரோ லேப்ஸ், திருச்சியில் ரதி லேபராட்டரிஸ், மதுரையில் காமராஜ் பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
1 லட்சம் டாமிப்ளூ மாத்திரை...
இது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் வி.கே.சுப்பாராஜ் கூறுகையில்,
புனேவில் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏற்கனவே 500 பாட்டில் பரிசோதனை மருந்துகள் வந்துள்ளன. மேலும், 1 லட்சம் டாமிப்ளூ மாத்திரை வரவழைக்கப்பட்டுள்ளது என்றார்.