ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள்-பட்டியலை வெளியிட்டது சிவிசி
அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் ஊழல்களைக் கண்காணித்து, அவற்றை அரசுகளுக்குக் கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் அமைப்புதான் ஊழல் கண்காணிப்பு ஆணையம்.
ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் எந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த பட்டியல் மட்டும் இதுவரை, ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை வெறும் துறை ரீதியில் எத்தனை பேர் என்ற பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அதிக அளவு ஊழல் புரிந்த 188 அதிகாரிகளின் பெயர்களையும், அவர்கள் பணிபுரிந்த துறைகளையும் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, தகுந்த தண்டனை வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஜூலையில் 101 அதிகாரிகள் பெயர் வெளியிடப்பட்டது. அவர்களில் 17 பேர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள்; 13 பேர், டெல்லி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்; 11 பேர், டெல்லி கார்ப்பரேஷன் அதிகாரிகள்.
இவர்கள் தவிர, மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஏழு அதிகாரிகள், நேரடி வரி விதிப்பு மைய அலுவலகத்தில் ஏழு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறையில் இரண்டு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ரயில்வே துறை மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 11 அதிகாரிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 134 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில், அதிக அளவாக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 46 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்த 13 பேர், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தை சேர்ந்த ஏழு பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.