எனது பயணத்தால் தலித்கள் மகிழ்கிறார்கள்-ராகுல்
உ.பி. மாநிலத்திற்கு திடீர் திடீரென ரகசியமாக ராகுல் காந்தி வந்து போவதையும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளில் தங்குவது, சாப்பிடுவது போன்றவையும், மாயாவதி அரசுக்கு கடும் டென்ஷனாக போயுள்ளது.
இப்படி ராகுல் காந்தி திடுதிப்பென வந்து போவதால் பாதுகாப்பு தர முடியாத நிலை இருப்பதாக அவர்கள் குறை பட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் யாருடைய வீட்டுக்கெல்லாம் செல்கிறேனோ அங்குள்ள மக்கள் என்னை முழு மனதுடன் வரவேற்கிறார்கள்.
என்னிடம் பாசமாக பேசுகிறார்கள். நீங்கள்தான் எங்களது வீட்டுக்கு வந்த முதல் அரசியல்வாதி என்றும் பெருமையுடன் கூறுகிறார்கள்.
ஒரு ஏழையின் வீட்டுக்கு நான் போவதை ஏன் விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு தலித்தின் வீட்டுக்கு ஒரு அரசியல்வாதி போனால் ஏன் போகிறாய் என்று கேட்கிறார்கள். அதேசமயம், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போவதில்லை. ஆனால் ஏன் போவதில்லை என்று யாரும் கேட்பதில்லை.
நான் எந்த விளம்பரத்திற்காகவும் தலித்கள் வீடுகளுக்குப் போகவில்லை. ஏழை குடிமகனின் வீட்டுக்குத்தான் நான் போகிறேன். இதில் என்ன தவறு என்றார் ராகுல் காந்தி.