நீலகிரியில் நியூட்ரினோ ஆய்வு: தமிழகம் பாலைவனமாகி விடும் - வைகோ
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
மத்திய அரசு நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நியூட்ரினோ அறிவியல் கூடத்தை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவிருப்பதாக தெரிகிறது. இந்த ஆராய்ச்சிக்கு இப்பகுதி தான் ஏற்ற இடம் என மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
நீலகிரியில் முதுமலை, மசினகுடி, மோயார் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள் இருக்கின்றன. இது தெற்காசியாவில் சிறந்த பல்லுயிர் மண்டலமாக இருக்கிறது. மேலும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் என பல வனப்பகுதிகள் உள்ளன.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களில் வாழும் யானைகளின் முக்கிய வழித்தடங்கள் இப்பகுதி தான். மேலும், இப்பகுதியில் பல்வேறு ஆதிவாசி இன மக்கள் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 10 ஏக்கர பரப்பில் மசினகுடி அருகே சிங்காராவில் ரூ. 917 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு கூடத்தை அமைக்கவிருக்கின்றனர்.
இத்திட்டத்துக்காக சிங்கார மலை உச்சியில் 1.3 கிமீ ஆழத்துக்கு 25 மீ மற்றும் 30 மீ சுற்றளவு கொண்ட பாதாள குகை தோண்டப்பட இருக்கிறது. மேலும் மலையின் வெளியிலிருந்து 2.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதை வழியாக இது இணைக்கப்படுகிறது.
இங்கு முதல் கட்டமாக காஸ்மிக் கதிர்களை உண்டாக்கும் அணு துகள் குறித்த ஆராய்ச்சியும், அடுத்த கட்டமாக ஜப்பான், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உருவாக்கப்படும் அணு துகள்களை பூமிக்குள் ஊடுருவ செய்து மசினகுடி ஆய்வகத்தை வந்தடையும் வகையில் ஆய்வு நடக்கவிருக்கிறது.
வாழ்வாதாரத்தை அழித்து ஆராய்ச்சி தேவையா...
ஆயிரமாயிரம் அணுகுண்டுகளை மனிதனால் உருவாக்க முடியும். ஆனால், நீலகிரி மலையைப்போல இன்னொரு மலையை உருவாக்க முடியாது. இயற்கையையும், மனிதனின் வாழ்வாதாரத்தையும் அழித்து செய்யப்படும் ஆராய்ச்சி மனிதகுலத்திற்கு என்ன வளர்ச்சியைக் கொடுத்துவிட முடியும்?
நமது தமிழகத்திற்கு நீராதாரமே மேற்குத் தொடர்ச்சி மலைதான். அந்த மலையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காரணத்திற்காகவும் அழித்துக் கொண்டே போனால் கடைசியில் மலையும் அழிந்து, மழையும் இழந்து நாடு பாலைவனமாகி விடும்.
ஆனால், ஆராய்ச்சி நிலையம் அந்தப் பகுதியில் வந்தால் வன அழிப்பும், வன விலங்குகளுக்குப் பாதுகாப்பின்மையும் ஏற்படும் என்பதுதான் உண்மை.
பெரிய அளவில் வேலைவாய்ப்பு இருக்காது...
நியூட்ரினோ ஆய்வகம் மசினகுடி வந்தால் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற செய்தி பரப்பப்படுகிறது. அது பெரிய அளவிலான ஆராய்ச்சி நிலையம் என்பதால் வி்ஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும் தான் அதில் வேலை கிடைக்கும். அப்பகுதி மக்களுக்கு மிக குறைந்த வேலைவாய்ப்பே கிடைக்கும்.
தமிழ்நாடு அரசு இன்னும் இடம் குறித்து முடிவும் தெரிவிக்காத நிலையில், மத்திய அமைச்சர், சிங்காரா தான் சிறந்த இடம் என கூறவது தமிழக அரசின் உரிமைக்குள் தலையிடுவதாகும். தமிழக அரசும் மசினகுடி பகுதியில் இந்த ஆய்வகம் அமைப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் வைகோ.