நியூசிலாந்தில் ஆந்திர மாணவர் மாயம்- கொலையா?
ஹைதராபாத்: நியூசிலாந்தில் படித்து வந்த ஆந்திர மாணவர் ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 11 நாட்களாக காணவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் போலீஸார் இதில் சில உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாக ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆந்திர மாநிலம் மெட்டுகுடா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். 23 வயதான இவர் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ வகுப்பில் படித்து வந்தார்.
இவரைக் கடந்த 11 நாட்ளாக காணவில்லை என்று நியூசிலாந்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தற்போது ஸ்ரீகாந்த்தின் தந்தை சக்ரபாணிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகளும், மருமகனும் ஆக்லாந்தில்தான் தங்கியுள்ளனர். கடந்த 11 நாட்களாக எனது மகனைக் காணவில்லை. இதுகுறித்து நியூசிலாந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார்.
அக்டோபர் 1ம் தேதி பல்கலைக்கழகத்திற்குக் கிளம்பிச் சென்றுள்ளார் ஸ்ரீகாந்த். அதன் பின்னர் அவர் இதுவரை திரும்பி வரவில்லை. அவர் பத்திரமாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என்கிறார் சக்ரபாணி.
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தங்களது மகன் காணாமல் போயுள்ளதால் ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தினர் பெரும் அச்சத்தி்ல் உள்ளனர்.
அக்டோபர் 2ம் தேதி மேற்கு ஹமைன் மரீனா பகுதியில், சாலையோரம், ஸ்ரீகாந்த்தின் மொபைல் போன், பர்ஸ் மற்றும் பை ஆகியவை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஸ்ரீகாந்த்தைத் தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் போலீஸ் தரப்பில் உண்மைகளை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த்தின் மைத்துனர் நாகேஷ் கக்கனூர் கூறுகையில், ஸ்ரீகாந்த் கடைசியாக காணப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள கடற்கரையில் அவரது பர்ஸ், இடது கால் ஷூ, பை மற்றும் ஓவர் கோட் ஆகியவை ஒரு பாறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வான் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் கடலில் தேடிப் பார்த்தனர்.
ஆனால் கடலில் நீச்சலடிக்கும் பழக்கம் ஸ்ரீகாந்த்துக்கு இல்லை. எனவே இதில் ஏதோ தவறு நடந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இதை போலீஸார் தீவிரமாக விசாரிக்காமல் உள்ளனர். மறைக்கப் பார்ப்பதாக சந்தேகிக்கிறோம் என்றார்.
இந்த நிலையில், நியூசிலாந்தில் உள்ள இந்திய துணைத் தூதர், நியூசிலாந்து அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications