சென்னையில் பயங்கரம்- மருத்துவ மாணவிகளுக்கு சரமாரி கத்திக் குத்து- தாய்மாமன் கைது
சென்னை: காதலித்து விட்டு கைகழுவியதால் ஆத்திரமடைந்த நபர், தனது அக்காள் மகளை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். இதில் அவர் படுகாயமடைந்தார். அதைத் தடுக்க முயன்ற இன்னொரு மாணவிக்கும் கத்திக் குத்து விழுந்தது. அந்த தாய்மாமனை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமரசம். இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவரது மகள் மதியரசி (20) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார்.
நேற்று மாலை கல்லூரிக்கு போய்விட்டு மதியரசி விடுதிக்கு வந்தார். அவருடன், இன்னொரு மருத்துவ மாணவி ராணியும் வந்தார்.
விடுதி வாசலில் திடீரென்று மர்ம வாலிபர் ஒருவர், மாணவி மதியரசியை வழிமறித்தார். என்னை காதலித்துவிட்டு, இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்ட போகிறாயே, உன்னை வாழவிடமாட்டேன் என்று கத்தியபடி அந்த வாலிபர் கையில் கத்தியோடு பாய்ந்து வந்தார்.
மாணவி மதியரசியை கத்தியால் குத்தினார். மதியரசி வலது கையால் தடுத்தார். இதில் வலது கையில் வெட்டு விழுந்தது. பின்னர் இரண்டு கைகளாலும் தடுத்தார். கத்தியோடு வந்த வாலிபர் வெறியோடு தாக்கினார். மதியரசியின் 2 கைகளிலும் சரமாரியாக வெட்டுக்கள் விழுந்தன.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சகமாணவி ராணியும் மர்ம வாலிபரை பிடிக்க முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த நபர், ராணியையும் அந்த வாலிபர் கத்தியால் குத்தினார். அவருக்கும் 2 கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. 2 மாணவிகளும் ரத்த வெள்ளத்தில் விடுதி வாசலில் சாய்ந்தனர்.
இதை பார்த்து மற்ற மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். விடுதி வளாகம் கடும் பரபரப்பானது. கத்தியால் குத்தியதில் மாணவி மதியரசியின் வலது கை கட்டைவிரல் துண்டித்து விழுந்தது.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து ஓடினார். ஆனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் காவலுக்கு இருந்த போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
போலீஸார் விரைந்து சென்று இரு மாணவிகளையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அந்த நபரின் பெயர் கலைவேந்தன் (35) என்று தெரிய வந்தது. மாணவி மதியரசியின் தாய் மாமன் ஆவார்.
போலீஸாரிடம் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பாச்சல் என்ற கிராமம் எனது சொந்த ஊராகும். நான் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் விவசாயம் பார்க்கிறேன். எனது தந்தை ராஜி ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. தாயார் பெயர் ராணி. எனக்கு ஒரு அண்ணனும், ஒரு தங்கையும் உள்ளனர்.
மதியரசி எனக்கு முறைப்பெண் ஆவார். சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் காதலித்தோம். எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்து மதியரசி சென்னைக்கு படிக்க வந்துவிட்டார். அவர் டாக்டருக்கு படித்ததால் இனிமேல் நமக்கு பொருத்தமான மனைவியாக இருக்கமாட்டார் என்று நான் கருதினேன். எனக்கு வேறு பெண் பார்த்து முடிக்க எனது பெற்றோர் முடிவு செய்தனர். அதற்கான முயற்சியிலும் இறங்கினார்கள்.
ஆனால் மதியரசி என் வீட்டுக்கு வந்து சண்டை போட்டார். நான் டாக்டர் ஆனாலும் நம் காதல் நிலையானது. நம் திருமணம் நடந்தே தீரும் என்று மதியரசி என்னிடம் உறுதி அளித்தார். அவரது பெற்றோரும் இதே உறுதிமொழியை கூறினார்கள்.
இதையடுத்து சனி, ஞாயிறு நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவோம். நானும் அடிக்கடி சென்னைக்கு வந்து சந்தித்து செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வேன். ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக மதியரசியின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. என்னை பார்ப்பதை தவிர்த்தார். அவரது பெற்றோர் திடீரென்று அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். நேற்று முன்தினம் நான் சென்னைக்கு வந்து இதுபற்றி மதியரசிடம் கேட்டேன்.
அவர் என்னை மறந்துவிடு, வேறு பெண்ணை திருமணம் செய்துகொள் என்று அலட்சியமாக கூறினார். இதனால் எனக்கு கிடைக்காத மதியரசி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று அவரை தீர்த்துக்கட்ட கத்தியால் குத்தினேன் என்றார்.
கலைவேந்தனின் செயலால் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.