'அல்வா சாப்புடுங்கோ'..ஸாரி கேக் சாப்புடுங்கோ!
அதிகாரம் மிக்க துறைகள், பணம் கொழிக்கும் துறைகள் யாருக்கு என்பதில் முதல்வர் எதியூரப்பாவுடன் சண்டை போட்ட அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், பாஜக மேலிடம் தந்துள்ள உத்தரவாதத்தையடுத்து அமைதியாகியுள்ளனர்.
அவர்கள் கேட்டது எல்லாம் படிப்படியாக செய்து தரப்படும் என்று பாஜக தலைமை உத்தரவாதம் தந்துள்ளதால் இந்த தாற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில் அத்வானியின் இல்லத்தில் வைத்து (அவருக்கு பிறந்த நாள் என்பதால்) ரெட்டிகளுக்கு எதியூரப்பாவும், எதியூரப்பாவுக்கு ரெட்டிகளும் மாறி மாறி 'அல்வா' ஊட்டிவிட்டுக் கொண்டனர்.. ஸாரி கேக் ஊட்டிவிட்டனர்.
பின்னர் தேசிய அளவில் தேர்தலுக்குத் தேர்தல் உருவெடுக்கும் மூன்றாவது அணித் தலைவர்கள் ஸ்டைலில் கையை ஒருவருடன் ஒருவர் கோர்த்து உயரே தூக்கிக் காட்டி எல்லாம் நலமே என்று சொல்லிவிட்டு பெங்களூருக்கு தனித்தனியே (ஏனோ!) விமானம் ஏறினர்.
எதியூரப்பா இன்று காலை பெங்களூர் திரும்பினார். விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பு முடிந்த வீடு திரும்பிய எதியூரப்பா நிருபர்களிடம் செயற்கையாக சிரி்த்தபடியே பேசுகையில்,
கடந்த 2 வாரமாக நிலவிய பிரச்சினை தீர்ந்து விட்டது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி எனது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். நாளை முதல் நீங்கள் வித்தியாசமான எதியூரப்பாவை பார்க்கலாம்.
சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளேன் (இவர் தான் ரெட்டி-எதியூரப்பா சண்டையின்போது இடையில் புகுந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்தவர்).
இனி ரெட்டி சகோதரர்களும் நானும் அமர்ந்து முடிவுகள் எடுப்போம். அது பற்றி இப்போது விரிவாக எதையும் சொல்ல முடியாது.
அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை. யாரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கும் எண்ணமும் இல்லை (எனது சுயநலத்துக்காக ஷோபா, ஆச்சாரியா ஆகிய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டதே என்று டெல்லியில் நேற்று முன்தினம் எதியூரப்பா அழுது கண்ணீர் விட்டதை மறந்துவிடவும்).
மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணிக்க ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது (இதில் ரெட்டிகளுக்கு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது). விரைவில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பெங்களூர் வர உள்ளார். அப்போது எல்லா பிரச்சனைகளும் பேசி தீர்க்கப்படும்.
இனி மழை நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தப் போகிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவேன் என்றார்.
சண்டை உச்ச கட்டத்தில் இருந்தபோது பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ரெட்டி சகோதரர்களின் ஆதரவு அதிகாரிகளை இடமாற்றம் செய்தீர்களே. அவர்கள் எல்லாம் மீண்டும் அங்கேயே நியமிக்கப்படுவார்களா என்று நிருபர்கள் எதியூரப்பாவிடம் இன்று காலை ஓபனாகவே கேட்க, அதைப்பற்றி மீடியாவில் பேச முடியாது என்று மறைக்காமல் பதில் சொன்னார்.
இவர் இவ்வாறு பேட்டி தந்த 2 மணி நேரத்தில் அமைச்சர் ஷோபா தனது பதவியை ராஜினாமா செய்தார். (ஷோபா தானாகவே தான் ராஜினாமா செய்தார்.. நான் நீக்கவில்லையே என்பார் அடுத்த முறை நிருபர்களை சந்திக்கும் எதியூரப்பா).
இதன்மூலம் ஷோபாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ரெட்டிகள் போட்ட முதல் நிபந்தனை ஏற்கப்பட்டுவி்ட்டது. இதே போல அடுத்தடுத்து பல காட்சிகள் வரும் தினங்களில் அரங்கேறும்.
ரெட்டிகளின் நிபந்தனைகளை அமலாக்க எதியூரப்பா கொஞ்சம் சுணக்கம் காட்டினாலும் அடுத்த ரவுண்ட் சண்டைக்கு நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.