வவுனியாவில் பள்ளிக்கூடங்கள் திறப்பு-கவர்னர் தகவல்
கொழும்பு: வவுனியாவில் தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வந்த பள்ளிக்கூடங்கள் வகுப்புகள் நடத்துவதற்காக திறந்துவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கவர்னர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இடம்பெயர்ந்த மக்களை தற்காலிகமாக தங்கவைக்க வவுனியாவில் உள்ள 18 பள்ளிகளை பயன்படுத்தினோம். இப்போது அங்கிருந்த மக்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவிட்டோம்.
சிலரை நல மையங்களுக்கு அனுப்பியுள்ளோம். பள்ளிகள் வழக்கும் போல செயல்பட வசதியாக திறக்கப்பட்டுள்ளன என்று சந்திரசிறி கூறினார்.
வவுனியாவில் மட்டும் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 70,000 பேர் பள்ளி்க்கூட சிறுவர், சிறுமிகள். அவர்களுக்கெல்லாம் தடைபட்ட கல்வியை மீண்டும் வழங்கவே இந்த ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிய அவர், தற்போது வவுனியா பகுதியில் 35,000 குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று படிப்பதாகவும் கூறுகிறார்.