நதிகள் இணைப்பு திட்டத்தில் மண்ணைப் போட்ட ராகுல்-கேரளா!
இதன்மூலம் நாம் கண்ட கனவெல்லாம் கானல் நீராக போய்விட்டது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று 2002ம் ஆண்டு சுதந்திர நாளன்று ஜனாதிபதி அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
இந்திராகாந்தி முதல் இப்போது மன்மோகன் சிங் காலம் வரையில் அனைத்து பிரதமர்களும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து வந்திருக்கிறார்கள்.
கடலில் கலக்கும் 70% நீர்:
இதை நிறைவேற்றினால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும்; நாடு வளம் பெறும். நாட்டில் ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என்ற நிலை தான் உள்ளது.
நமது நாட்டில் மொத்த நீர் வளத்தில் 30 சதவீதம்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதி 70 சதவீத நீர் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுப்பதற்கு நதிகள் இணைப்புத் திட்டம் பயன்படும்.
நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதிதாக 3 கோடியே 40 லட்சம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறும்.
வழியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் 5 பெருநகரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
ஆண்டுக்கு 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யலாம். அத்துடன் 3 கோடியே 70 லட்சம் மனித ஆண்டுகள் அளவுள்ள வேலைவாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அவசியத்தை உணர்ந்துதான் வாஜ்பாய் தலைமையில் அமைந்திருந்த அரசு, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, ஒரு உயர்நிலை செயல்திட்டக் குழுவை நியமித்தது. அந்தக் குழுவினரும் நதிகள் இணைப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகளை அவசரமாக தொடங்கினார்கள்.
நினைத்ததை சாதித்த கேரளா:
முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு தொடர்ந்து கேரள மாநிலம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் எந்த தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இத்திட்டத்தை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக எந்தவொரு பிரச்சனையிலும் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் கேரளா, இப்போது நதிகள் இணைப்புத் திட்ட எதிர்ப்பிலும் நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறது.
கங்கையையும் காவிரியையும் இணைக்கும் தேசிய திட்டத்தை நிறைவேற்ற பெருமளவு நிதி தேவைப்படும் என்பதால் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்திருக்கிறார்.
மண்ணைப் போட்ட ராகுல்:
அண்மையில் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்றும், இந்தத்
திட்டத்தினால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்றும் அறிவித்துவிட்டு சென்றார்.
அவரது இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே கங்கையையும், காவிரியையும் இணைக்கும் தேசியத் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
காவிரியும் வைகையும் பாயும் தமிழகம் இன்னும் 25 ஆண்டுகளில் பாலைவனமாக மாறும் ஆபத்து உள்ளதாக நீரியல் நிபுணர்கள் அபாயக் கொடி காட்டியுள்ளனர். அப்படிப்பட்ட ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தமிழகம், கங்கையும் காவிரியும் இணைக்கப்பட்டால் பயன்பெறும்; என்று நாம் கண்ட கனவெல்லாம் இன்றைக்கு பெரும் கானல்நீராக போய்விட்டது.
இப்போது கங்கையையும், காவிரியையும் இணைப்பதற்குப் பதிலாக வடக்கில் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகள் ஆகியவற்றை இணைக்கும் திட்டம் தனியாகவும், தென்னிந்திய தீபகற்பத்தில் உருவாகும் நதிகளை இணைக்கும் திட்டம் தனியாகவும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பன்சால் அறிவித்திருக்கிறார்.
இந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?.
தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று அடம் பிடித்துவரும் கேரளாவை இதற்கு எப்படி சம்மதிக்கவைக்க போகிறீர்கள்?.
தீபகற்ப நதிகளை இணைப்போம் என்பது உண்மையானால், முதலில் நாட்டில் உள்ள அனைத்து பெரிய நதிகளையும் நாட்டுடமையாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். நதிகளை எல்லாம் தேசிய சொத்து என்று அறிவிக்க வேண்டும். இப்படி செய்யாமல், தீபகற்ப நதிகளை இணைப்போம் என்று பேசுவதும், மக்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஏமாற்றுகின்ற செயலாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
திட்டம் கைவிடப்படவில்லை-அமைச்சர்:
இந் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நதிகள் இணைப்பு திட்டம் கைவிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் நான் அவ்வாறு கூறவில்லை. நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் போது ஏற்படும் சுற்றுப்புற பாதிப்பு பற்றி மாநில அரசுகளின் கருத்து கேட்கப்படும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், நதிகள் இணைப்பு பற்றி குறிப்பிட்டு இருக்கிறோம். இதற்காக ரூ.4.4 லட்சம் கோடி செலவில் 5 திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக தெற்கு நோக்கி பாயும் நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இவர் நாடாளுமன்றத்தில் சொன்னதை நம்புவதா அல்லது அறிக்கையில் சொல்வதை நம்புவதா என்று தெரியவில்லை.