நீதிபதி, இன்ஸ்பெக்டர் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி பள்ளிக, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் நர்சரி பிரைமரி பள்ளிக்கு கடந்த 13-ந் தேதி அன்று மர்மமான மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இதுபற்றி போலீசில் தகவல் கொடுத்தால் குண்டு வைத்து பள்ளியை தகர்த்து விடுவேன் என்றும், அது முடியா விட்டால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கடத்தி சென்று கொலை செய்து விடுவேன்'' என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுபோன்ற மிரட்டல் கடிதம் கடந்த 26-ந் தேதி அன்றும் அதே பள்ளிக்கு மீண்டும் வந்தது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் முத்தியால்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை நகரில் இதுபோல் 15 பள்ளிகளுக்கும், 2 கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டன. பள்ளிகளில் தற்போது பரீட்சை நடப்பதால் பாதிப்பு எதுவும் வராமல் தடுக்கும் நோக்கத்தோடு ரகசியமாக இந்த மிரட்டல் கடிதங்கள் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

மிரட்டல் கடிதங்கள் வெவ்வேறு பெயர்களில் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அனைத்து கடிதங்களிலும் ஒரே மாதிரியான வாசகங்களும், கையெழுத்தும் இருந்தன. எனவே ஒரு குறிப்பிட்ட நபர்தான் இந்த கடிதங்களை எழுதி போஸ்ட் செய்திருப்பார் என்றும் கருதப்பட்டது.

அந்த மர்ம நபரை பிடிக்க கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் ஷேசசாயி, துணை கமிஷனர் வில்வராணிமுருகன், உதவி கமிஷனர் காதர் மொய்தீன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் படை அமைக்கப்பட்டது. அனைத்து மிரட்டல் கடிதங்களும் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் போஸ்ட் செய்யப்பட்டிருந்தது.

எனவே, மிரட்டல் ஆசாமி அந்த பகுதியை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் யார்? யார்? தபால் போடுகிறார்கள் என்பதை ரகசியமாக கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தபால் ஒன்றை போஸ்ட் செய்தார். அவரைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். அதில், இவர்தான் மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியது என்று தெரிய வந்தது.

அந்த நபரின் பெயர் பூபதி. வியாசர்பாடியைச் சேர்ந்தவர். போலீஸாரிடம் பூபதி கொடுத்த வாக்குமூலத்தில்,

எனது தந்தை பெயர் நரசிம்மன். அவர் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர். எனது தாயார் சரோஜா. எனக்கு ஒரு சகோதரியும், 2 சகோதரர்களும் உள்ளனர். நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். நான் ஒரு பயந்த சுபாவம் உள்ளவன்.

மாமிசம் சாப்பிடும் பழக்கம், போதை பழக்கம், சிகரெட் பழக்கம், பெண்களுடன் தப்பான உறவு போன்ற எந்த கெட்டப் பழக்கமும் எனக்கு கிடையாது. இதனால் நான் பலரால் பல நேரங்களில் ஏமாற்றப்பட்டேன். நான் வேலை பார்த்த அரசு மதுக்கடையில் திருட்டு போய் விட்டது.

அந்த திருட்டுப் பணத்தை நான்தான் கட்ட வேண்டும் என்று என் மீது பழியை போட்டு விட்டனர். மீண்டும் வேலை கேட்டால் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதேபோல் எனது உறவினர்கள், நண்பர்கள் பலர் என்னிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டனர். இந்த ஏமாற்று உலகத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்தால் எனது மனைவி கூட என்னை ஏமாற்றி விடுவாள் என்று திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

இந்தியன் படத்தில் தாத்தா கொலை செய்வது போல என்னால் முடியவில்லை. அதற்கு பதிலாக எனக்கு கெடுதல் செய்பவர்களின் பெயரில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்களை எழுதினேன். அதை வைத்து அவர்களை போலீசார் பிடித்து ஜெயிலுக்கு அனுப்புவார்கள் என்று நம்பினேன். இதுவும் ஒருவகையில் பழி தீர்ப்பதுதான்.

அரசு மதுக்கடையில் மீண்டும் வேலை கேட்டு தொழிலாளர் நல கோர்ட்டில் வழக்குப் போட்டேன். ஆனால் நீதிபதி எனக்கு சரியாக தீர்ப்பு வழங்கவில்லை. இதனால் அந்த நீதிபதியின் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பினேன்.

செம்பியம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவர் என்னை சந்தேகத்தின் பேரில் பிடித்து அடித்து உதைத்ததோடு எனது செல்போனையும் பிடுங்கிக் கொண்டார். இதனால் அந்த இன்ஸ்பெக்டர் பெயரிலும் மிரட்டல் கடிதம் அனுப்பினேன். இதுபோல் எனக்கு கெடுதல் செய்த 20 பேர் பெயரில் கடிதம் அனுப்பினேன்.

நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன். எந்த சுகத்தையும் அனுபவிக்க வில்லை. அனுபவிக்கவும் இந்த சமுதாயம் விடவில்லை என்று கூறி கதறி அழுது கீழே விழுந்து புரண்டார் பூபதி.

பூபதியைக் கைது செய்த போலீஸார், கொலை மிரட்டல் வழக்கு போட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+