மின்வெட்டால் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு: அதிமுக
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டு காரணமாக தனியார் துறையில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
தொழிலாளர் நலத்துறை துறை அமைச்சர் அன்பரசன்: கடந்த நான்கு ஆண்டுகளில், 169 வேலை நிறுத்தங்கள் மற்றும் 63 கதவடைப்பு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. அதிமுக, ஆட்சியில் அமைப்பு சாரா வாரியங்கள் சீரழிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். அதை மாற்றி, தனித்தனி வாரியங்களை முதல்வர் கருணாநிதி அமைத்ததோடு, மாவட்டங்களிலும் வாரியங்களுக்கு அலுவலகங்களை ஏற்படுத்தினார்.
செங்கோட்டையன் (அதிமுக): கடந்த 2000ம் ஆண்டு அவசர கோலத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு அமைப்புசாரா நல வாரியம் துவக்கப்பட்டது. ஆனால், ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. அம்மாவின் ஆட்சியில் தான் அவர் அதை சீர் செய்து நிதி ஒதுக்கினார்.
அமைச்சர் அன்பரசன்: கடந்த ஆட்சியில் பணி நியமன தடைச் சட்டம் போடப்பட்டதால், இளைஞர்கள் வாழ்வு சீரழிந்தது. இந்த அரசு அந்த சட்டத்தை நீக்கியதால், இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றினார் முதல்வர் கருணாநிதி. இந்த அரசு வந்த பின், நான்கு லட்சத்து 65 ஆயிரத்து 748 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
செங்கோட்டையன்: தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இதே பதிலை சொல்லி வருகிறீர்கள். நிதி நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கை காரணமாகவே அதிமுக அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. தற்போது கூடுதல் நிதி இருப்பதால் நிரப்பி வருகிறீர்கள்.
நான்கு லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாக கூறுகிறீர்கள். மின் வெட்டு காரணமாக, 10 லட்சம் தொழிலாளர்கள் தனியார் துறையில் வேலை இழந்துள்ளார்களே அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
அமைச்சர் அன்பரசன்: தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டால் ஒருவர் கூட வேலை இழக்கவில்லை. இரவு ஷிப்ட் பார்த்தவர்கள், பகல் ஷிப்ட் மாறியிருப்பார்கள்.
இவ்வாபு விவாதம் நடந்தது.
பின்னர் தொழிலாளர் நலத்துறை சார்பாக அமைச்சர் அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
-அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் படிக்கும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை, 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உதவித் தொகை பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் 16 ஆயிரத்து100 ரூபாய்என்று இருப்பதை, ஆண்டு வருமான வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
-கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை, பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, தங்களது பதிவை புதுப்பிக்கவும், அதன்மூலம் வேலைவாய்ப்பு பெற்றிடவும், நடப்பு ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.
-ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் சென்னை அயனாவரம், வேலூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி, சிவகாசி மற்றும் ஓசூர் ஆகிய எட்டு இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications