'பேச்சு'-நக்ஸல்கள் நிராகரிப்பு: கண்ணிவெடிக்கு 4 வீரர்கள் பலி
ராய்ப்பூர்: தாக்குதலைக் கைவிட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வேண்டுகோளை நக்ஸல்கள் நிராகரித்துவிட்டனர்.
குறைந்தபட்சம் 72 மணி நேரத்துக்கு வன்முறையைக் கைவிட்டு அரசுடன் பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்று சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கை ஏற்க நக்ஸல் தலைவர் ரமணா மறுத்துவிட்டார். சத்தீஷ்கரில் உள்ள பஸ்தர் மாவட்டத்திலிருந்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
அரசின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை கைவிட மாட்டோம். உள்துறை அமைச்சர் ஏற்கெனவே இதுபோன்ற கோரிக்கையை முன் வைத்தபோது அதை ஏற்று பேச்சுவார்த்தைக்கு முன் வந்தோம். ஆனால் அரசு எங்களை நம்பவில்லை. எங்கள் கோரிக்கையின்படி குவிக்கப்பட்ட போலீஸார் யாரும் அப்புறப்படுத்தப்படவில்லை.
அவர்களுடைய அட்டூழியங்கள் நாள்தோறும் தொடர்கின்றன. போலீஸாருக்கு பயந்து மக்கள் கிராமங்களை விட்டு ஓடுகின்றனர். பின்னர் அரசுடன் பேச்சு நடத்தி என்ன பயன்?
பொதுமக்களை போலீஸார் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர். தாண்டேவாடாவி்ல் போலீஸாரை குறிவைத்து தான் பஸ்ஸைத் தகர்த்தோம். அதில் அப்பாவிகளும் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்றார்.
2வது நாளாக பந்த்-ரயில்கள் ரத்து:
இந் நிலையில் பிகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கத்தில் நக்ஸல்கள் அழைப்பு விடுத்த 48 மணி நேர பந்த் இன்று இரண்டாவது நாளை எட்டியது.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியில் தண்டவாளத்தை நக்ஸல்கள் கண்ணிவெடி வைத்து தகர்த்தனர். மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் தண்டவாளத்தை தகர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டவாளம் தகர்கக்கப்பட்டதில் அந்த வழியில் வந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 2 டிரைவர்கள் காயமடைந்தனர்.
கண்ணிவெடியில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் பலி:
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் கோல்டோர் என்ற இடத்தில் நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி 4 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பலியாயினர். அவர்கள் சென்ற வாகனம் கண்ணி வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
ரயில்கள் ரத்து:
பந்த் காரணமாக இந்த 5 மாநிலங்களிலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிகார், ஜார்கண்ட் மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மத்திய ரயில்வே, 8 ரயில்களை ரத்து செய்துள்ளது. 6 ரயில்கள் மாற்று பாதையில் விடப்பட்டுள்ளன.
மேலும் ராஜதானி உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் மிகக் குறைந்த வேகத்தில் ஓட்டுமாறு ரயில் டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 75 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது உத்தரவிடப்பட்டு உள்ளது.
சந்தேகத்துக்கு இடம் இருந்தால் ரயில் பாதையில், சோதனை ஓட்டமாக ஒரு என்ஜினை மட்டும் ஓட்டிப் பார்த்துவிட்டு ரயிலை இயக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பந்த் காரணமாக சட்டீஷ்கர் மாநிலத்தில் பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
பள்ளிகள், கடைகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள மேற்கு மிட்னாப்பூர், பங்குரா, புருலியா மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வனப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள், போலீஸ் முகாம்களில் 24 மணி நேர கண்காணிப்பில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள்தான்: ராமன்சிங்
இதற்கிடையே தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள்தான் என்று சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவோஸ்டுகள் பிரச்சனை நமது நாட்டுக்கே பெரும் சவால். நாட்டின் வளர்ச்சியை தடை செய்வது ஒன்றே மாவோயிஸ்டுகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பொதுமக்கள் பலியாவது பெரும் துயரம்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகள்தான். பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதிகளுடன் மாவோயிஸ்டுகளுக்கு தொடர்புள்ளது.
மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் மாநில அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்படும். மாவோயிஸ்டுகள் வேட்டைக்கு விமானங்களை பயன்படுத்த வேண்டியதில்லை என்றார்.