உழவர் உழைப்பாளர் கட்சி மாநாடு: கேரள அரசுக்கு கண்டனம்
குற்றாலம்: முல்லைப் பெரியாறு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறிக்கும் கேரள அரசுக்கு உழவர் உழைப்பாளர் கட்சி மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநாடு அதன் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக கைத்தறி மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மாநிலங்களவை உறு்ப்பினர் கே.பி. ராமலிங்கம், தொழிலாளர் நல வாரிய இணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய வி.பி. ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
இன்றைய காலகட்டகத்தில் 25 லட்சம் விவசாய பம்பு செட்டுகளின் நீர்பாசனத்திற்கு இலவச மின்சாரம் பெருவதற்கும், ரூ.7000 கோடி கடன் சலுகை பெருவதற்கும், மூல காரணமாக விளங்கி, கடந்த கால விவசாய போராட்டங்களில் கலந்து உயிர் நீத்த உத்தம தியாகிகளுக்கு இம்மாநாடு இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறது.
ஊரக வேலை வாய்ப்பு தி்ட்டத்தினால் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், ஏற்கனவே கஷ்டத்திலும், நஷ்டத்திலும் நலிவுற்று வருகின்ற விவசாய தொழில் மேலும் நசிந்து உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி உருவாகும் நிலை உள்ளது. எனவே இத்திட்டத்தில் விவசாய வேலைகளையும் இணைத்து உழவு தொழிலை காப்பாற்ற மாண்புமிகு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டு கொள்கிறது.
முல்லை பெரியாறு பிரச்சனையிலும், அமராவதி அணையின் மேல், பம்பையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து தமிழக விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறிக்க நினைக்கும் கேரள அரசுக்கு இம்மாநாடு கண்டனத்தை தெரிவிப்பதோடு, தமிழகத்து உரிமைகளை மீட்க தொடர்ந்து எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வரை இம்மாநாடு கேட்டு கொள்கிறது..