ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை-எதியூரப்பா
பாஜகவுக்கும், எதியூரப்பாவுக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்து இப்போது தாங்களே பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள ரெட்டி சகோதரர்களான கர்நாடக அமைச்சர்கள் ஜனார்த்தன் ரெட்டி, கருணாகரன் ரெட்டி ஆகியோர் முதல்வர் எதியூரப்பாவையும், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜையும் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
சட்டவிரோத சுரங்கத் தொழிலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ரெட்டி சகோதரர்களின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களை நீக்க வேண்டும் என கர்நாடக ஆளுநர் பரத்வாஜே தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர்களின் மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில் டெல்லி வந்துள்ள இரு ரெட்டிகளும் சுஷ்மாவை சந்தித்தனர். பின்னர் எதியூரப்பாவையும் சந்தித்துப் பேசினர். ரெட்டி சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் சுஷ்மா சுவராஜ். இவர் பெல்லாரியில் சோனிய காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது அவரது முழுச் செலவுகளையும் ரெட்டிகளே கவனித்துக் கொண்டனர். இதனால் ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில் சுஷ்மாவை வைத்துத்தான் பாஜக மேலிடம் டீல் செய்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினையையும் சுஷ்மா வசம் விட்டுள்ளது பாஜக மேலிடம். கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எதியூரப்பா பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த பாஜக தலைவர் அத்வானி, பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரெட்டி சகோதரர்களின் சந்திப்புக்குப் பின்னர் எதியூரப்பா கூறுகையில், அவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை. சட்டவிரோத சுரங்கத் தொழில் குறித்து நாங்கள் விரிவாகப் பேசினோம். அதேசமயம், அவர்களுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
2002ம் ஆண்டு முதல் இப்போது வரை சுரங்கத் தொழில் தொடர்பான அனைத்து விவாகரங்களையும் விரிவாக விசாரிக்குமாறு லோகாயுக்தா கேட்டுக் கொள்ளப்படும் என்றார்.
ரெட்டி சகோதரர்களை விட்டுக் கொடுக்க பாஜக தயாராக இல்லை என்பது எதியூரப்பாவின் பேட்டியின் மூலம் தெரிகிறது. அதேசமயம், இனிமேல் கர்நாடக பாஜக அரசுக்கு எந்தவித நெருக்கடியும் தராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என ரெட்டி சகோதரர்களுக்கு பாஜக தலைமை கண்டிப்புடன் உத்தரவிட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு குறித்து ஜனார்த்தன் ரெட்டி கூறுகையில், நானும், அமைச்சர் கருணாகரன் ரெட்டியும் சுஷ்மா சுவராஜிடம் தற்போதைய நிலவரம் குறித்து விவரித்தோம்.
அனைத்து விவரங்களையும் சுஷ்மா கேட்டறிந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் இருக்கும் உள்நோக்கத்தையும் அவர் புரிந்து கொண்டார்.
எங்களுக்கு எதிராக காங்கிரஸ் கூறி வரும் அனைத்துப் புகார்களிலும் உண்மை கிடையாது. காங்கிரஸுக்கு கர்நாடகத்தில் பெயர்கெட்டுப் போய் விட்டது. அதிலிருந்து மீள எங்களைக்குறி வைத்துள்ளது. ஒன்றுமில்லாததுக்காக அடித்துக் கொள்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் திட்டம் எதுவாக இருந்தாலும் அது பலிக்காது, தோல்வியிலேயே முடியும்.
முதல்வர் எதியூரப்பா உள்பட நாங்கள் அனைவருமே காங்கிரஸுக்கு எதிராகத்தான் போராடி வருகிறோம். நாங்கள் அனைவருமே உண்மையான பாஜக தொண்டர்கள்.
நாளை பெங்களூரில் செய்தியாளர்களை சந்திப்போம்.அப்போது காங்கிரஸ் கட்சி எங்கள் மீது சுமத்தியுள்ள புகார்களுக்கு விரிவாக பதிலளிப்போம் என்றார் ஜனார்த்தன் ரெட்டி.