புதிய விமான நிலையத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
சென்னை: சென்னை அருகே க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து எனது தலைமையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் இருப்பிடங்களையும், விவசாயிகளின் விளைநிலங்களையும் அபகரிக்கக்கூடாது.
சென்னைக்கு அருகே க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் பாதிக்கப்படாதவாறு வேறு மாற்று இடங்களை தேர்வு செய்து க்ரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க அரசு முன் வர வேண்டும்.
சென்னையை சுற்றி தனியார் வளைத்துப் போட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் இடங்களை கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கும் விளை நிலங்களுக்கும் பாதிப்பு குறையும்.
விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வரும் 23ம் தேதி திருவள்ளூரில் எனது தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
சமத்துவபுரத்தை எதிர்த்து 2 பாமகவினர் தீக்குளிக்க முயற்சி:
இந் நிலையி்ல ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியை அடுத்த ஆதிநாதபுரத்தில் சமத்துவபுரம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்ய வந்த பாமகவினர் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்வார்திருநகரி அருகே ஆதிநாதபுரத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் கட்ட கடந்த வாரம் அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டினார். ஆதிநாதபுர கிராம மக்களும், பாமகவும் அங்கு சமத்துவபுரம் கட்டக் கூடாது என்றும், ஏற்கனவே அங்கு இருந்த மாட்டுத் தாவனியை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதற்கிடையே அப்பகுதியில் சமத்துவபுரம் கட்டுவதற்கான அஸ்திவார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதை கண்டுத்து இன்று காலை வினயரசு தலைமையில் திருச்செந்தூர் ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பாமகவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதன்படி இன்று 9.50 மணி அளவில் ஆதிநாதபுரத்தில் இருந்து நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் மறியல் செய்ய பாமகவினர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலத்தில் சமத்துவபுரத்திற்கு எதிராகவும், போலீசாரைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
அப்போது ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி பார்வதி, இசக்கி முத்து ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் பாய்ந்து சென்று அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு தர்ணா நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications