மதுரை வரும் விகடன் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்-தலித் விடுதலை இயக்கம்
கரூர்: மதுரைக்கு வரும் ஜூனியர் விகடன் குழும பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அந்த பொறுப்பை தலித் விடுதலை இயக்கம் ஏற்றுக் கொள்ளும் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தலித் விடுதலை இயக்க இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் தலித் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜூனியர் விகடன் என்ற வாரம் இரு முறை இதழில் மதுரை பொட்டு சுரேஷ் என்பவர் பற்றி செய்தி வந்தாக கூறி சிலர் இல்லத்துப் பிள்ளைமார் சங்கம் என்ற பெயரில் கண்டன விளம்பரம் கொடுத்துள்ளனர். மேலும் மதுரைக்கு வரும் ஜூனியர் விடகன் குழுமத்தைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் நிருபர்களை குண்டர்கள் படை தாக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
மேலும், பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கைகளை அச்சுறுத்தும் விதமாகவும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும் திமுகவைச் சேர்ந்த சிலர் வெறியாட்டம் போட்டு வருகின்றனர்.
இந்தியா என்பது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சமம். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தீர்க்க நீதி மன்றம் இருக்கு. மேலும் பல்வேறு விதமான ஜனநாயக வழிகள் உள்ளது. அதை விடுத்து வன்முறை பாதையை தேர்வு செய்வதும், அதை ஊக்குவிப்பதும் நல்ல அரசுக்கு அழகல்ல.
மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுக்கு உள்ளது. அதை அந்த அரசுகள் செய்ய தவறும் போது, அந்த பணியை தலித் விடுதலை இயக்கம் கையில் எடுக்கும். எங்களது உயிரை கொடுத்தாவது பத்திரிக்கையாளர்களை பாதுகாப்போம் என்றார்.