தயா மாஸ்டருக்கு டி.வி. நிலையத்தில் வேலை: ரூ. 50 லட்சத்தில் பங்களா
மேலும் அவருக்காக யாழ்பாணத்தி்ல் ரூ. 50 லட்சம் செலவில் பிரமாண்ட பங்களாவையும் இலங்கை அரசு கட்டி வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் வேலாயுதம் தயாநிதி என்ற தயா மாஸ்டர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தவர்.
புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தபோது இவரும், விடுதலைப் புலி இயக்கத்தின் மொழி பெயர்ப்பாளர் ஜார்ஜ் மாஸ்டரும் தப்பியோடி ராணுவத்திடம் சரணடைந்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வழங்கப்பட்ட விஷேச கவனிப்பால் இருவரும் இலங்கை அரசின் விசுவாசிகளாக மாறிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மீதான வழக்குகளை இலங்கை அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் தற்போது தயா மாஸ்டருக்கு தொலைக்காட்சி ஒன்றில் தலைமை செய்தியாளராக வேலை தரப்பட்டுள்ளது.
இந்த டி.வி. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணிக்கு ஆதரவான சில பிரான்ஸ் தமிழர்களால் நடத்தப்படுகிறது.
அதிபர் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக இந்தத் தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜபக்சேவின் உத்தரவுப்படியே அவருக்கு இதில் வேலை தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புலிகள் இயக்கத்தில் சேருவதற்கு முன் யாழ்ப்பாணம் அரசு பள்ளியில் இவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தயா மாஸ்டர். அவரது மனைவி கிளிநொச்சியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு அந்த பள்ளியின் முதல்வராக பதவி உயர்வும் வழங்கப்படுள்ளது.
மேலும் தயா மாஸ்டருக்கு யாழ்ப்பாணத்தில் பாயிண்ட் பெட்ரோ அருகே ரூ. 50 லட்சம் செலவில் மாபெரும் பங்களாவையும் அரசு கட்டி வருகிறது.
இதய நோயாளியான தயா மாஸ்டருக்கு கொழும்பில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அரசின் நிதியுதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மே 19ம் தேதி நந்தி கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை கருணாவுடன் சேர்ந்து அடையாளம் காட்டியவர் தயா மாஸ்டர் ஆவார்.