கிறிஸ்தவ அமைப்புகளைத் தாக்குவதை ஏற்க முடியாது-முஸ்லீம் தலைவர்கள் கண்டனம்
டெல்லி: எந்த ஒரு மதத்தையும் அவமானப்படுத்துவது, அதன் புனித அடையாளங்களை இழிவுபடுத்துவது, மத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றை ஏற்க முடியாது என்று இந்திய முஸ்லீம் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் திருக்குரான் அவமதிக்கப்பட்டு நூல் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து காஷ்மீரில் வன்முறை வெடித்தது. கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு முஸ்லீம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய முஸ்லீம் மஜ்லீஸ் இ முஷாவரத் அமைப்பின் தலைவர் சையத் சஹாபுதீன், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளர் நுஸ்ரத் அலி, மஜ்லிஸ் இத்தாஹதுல் முஸ்லிமின் அமைப்பின் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஓவைசி, மதங்களுக்கிடையிலான கூட்டணி மற்றும் ஜகாத் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சபர் மஹமூத், இந்திய முஸ்லீம்கள் இயக்க செயலாளர் நவைத் ஹமீத், தி மில்லி கெஜட் எடிட்டர் டாக்டர் ஜபரூல் இஸ்லாம் கான் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை...
எந்த ஒரு மதத்தையும் அவமானப்படுத்துவது அல்லது அதன் புனித அடையாளங்களை இழிவுபடுத்துவது, எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்லது அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்றவை, உலகில் எங்கு நடந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறோம். இது நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
குறிப்பாக இதுபோன்ற செயல்களையும், நடத்தைகளையும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை, மாறாக தடை செய்கிறது. எனவே காஷ்மீரின் சில பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தின் மலேர் கோட்லா பகுதியிலும் கிறிஸ்தவ அமைப்புகள் மீதும், நிறுவனங்கள் மீதும் வன்முறையை ஏவி தாக்குதல் நடத்துவது போன்ற செயலையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், உலகெங்கும் உள்ள முஸ்லீம் சகோதரர்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ளவர்கள், இதுபோன்ற செயல்களுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியோ அல்லது பத்திரிக்கை செய்திக்குறிப்புகளை வெளியிட்டோ, உரிய அதிகாரிகளிடம் மனு அளித்தோ தங்களது எதிர்ப்புகளைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.