'அயோத்தி': கோவை உட்பட 32 இடங்கள் பதற்றமானவை
மத்திய-மாநில உளவுப் பிரிவினர் கொடுத்துள்ள தகவலின்படி இந்தப் பட்டியலை உள்துறை அமைச்சகம் உருவாக்கி, இங்கு பாதுகாப்பை பலப்படு்த்தி வருகிறது.
கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும் அதிகளவில் கலவரம் நடக்க வாய்ப்புள்ள மாநிலங்களாகவும் அடையாளம் காணப்பட்டு அங்கு மத்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
பிரச்சனைக்குரிய அயோத்தி நகரம் முழுவதையும் மத்திய படை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. கோவில் பகுதி அமைந்துள்ள இடத்தை சுற்றி அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. கடும் சோதனைக்கு பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மீரட், லக்னெள, மதுரா, அலகாபாத், கான்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் கலவரம் வெடிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் மாயாவதி இரு மதத்தினரையும் சேர்ந்த அமைதி குழுவை ஏற்படுத்தியுள்ளார். இதே போல ஒவ்வொரு மாவட்ட அளவிலும், நகர அளவிலும் அமைதி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாயாவதி எச்சரித்துள்ளார்.
மேலும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் கோவை நகரை பதற்றமான பகுதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கோவையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசார் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். பதற்றமான இடங்களில் அதிரடிப்படைகள் ரோந்து சுற்றி வருகின்றன.
25 தமிழக ரயில் நிலையங்களி்ல் கூடுதல் பாதுகாப்பு:
தமிழக ரயில்வே ஐ.ஜியான கே.சி. மகாலி கூறுகையி்ல்,
தமிழகத்தில் 25 ரயில் நிலையங்கள் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் இதில் அடங்கும். இதே போல 100 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதட்டமான பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் அதிரடிப்படை போலீசாரும் பயணிப்பர். அவர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர் என்றார்.