சொகுசு கார் வைத்திருப்போருக்கு மானிய விலை டீஸல் எதற்கு?-ஜெய்ராம் ரமேஷ்
ஆட்டோமொபைல் துறையில், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெஹிக்கில் எனப்படும் சொகுசுக் கார்களை வைத்திருப்பது மற்றும் அதன் பயன்பாடு குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
இந்த வகைக் கார்களை பெரும்பாலும் குற்றச் செயல் புரிவதற்கே பலர் பயன்படுத்துவதாக அவர் முன்பு குறிப்பிட்டிருந்தார். இவை Sports Utility Vehicle அல்ல... சமுதாயத்துக்கு எந்த அளவும் பயன்படாத Socially Useless Vehicles என்று ஜெய்ராம் ரமேஷ் வர்ணித்திருந்தது நினைவிருக்கலாம். இந்த வகை கார்களை அவசியமானவர்கள் வைத்துக் கொள்வதில்லை என்றும், தனி நபர் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இது சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்துக்குக் கேடு என்றும் அவர் கூறியிருந்தார்.
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், இந்த வகை கார்களுக்கு இனி அரசு மானியத்தில் விற்கப்படும் டீஸல் தரக்கூடாது என்றும், முழு விலை கொடுத்து இவர்கள் டீஸல் வாங்க வேண்டும் என்றும் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் பங்குகளில் தனி பம்ப் வைத்து, இந்த வகை வாகனங்களுக்கு முழு விலைக்கு டீஸல் விற்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிஐஐ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்தான் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
தனது இந்தக் கருத்து ஆட்டோமொபைல் துறைக்கு எதிரானதல்ல என்றும், நாட்டின் எரிசக்தி வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதே என்ற ஆதங்கத்தின் விளைவே என்றும் கூறினார்.