என்னை சிறையில் அடைத்தவர்களுக்கு சட்டப்சபைத் தேர்தலில் பாடம் புகட்டுவேன்-ஜான் பாண்டியன்
திருநெல்வேலி: நிரபராதியான என்னை சிறையில் அடைத்தவர்களுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் பாடம் புகட்டுவேன் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை தொழில் அதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான்பாண்டியனை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 6-ம் தேதி சேலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நான் எந்த தவறும் செய்யவில்லை. மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன்.
நிரபராதியான என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்தவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாடம் புகட்டுவேன்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக கிராமங்களில் உள்ள தலித் மக்களை சந்திக்கவிருக்கிறேன். கடந்த காலம் போல எனது சமுதாய பணி தொடரும்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதை பெரும்பாலான தேவேந்திரகுல மக்கள் விரும்பவில்லை. அவர் என்ன நிர்ப்பந்தத்தினால் அங்கு சென்றார் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.