சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பேன்-ராசா; கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் ராசாவின் டெல்லி, சென்னை, பெரம்பலூர் வீடுகளிலும், அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
இந் நிலையில் நேற்றிரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ராசா விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்களிடம் பேசுகையில்,
சிபிஐ நடத்திய சோதனை ஒரு ஆய்வு போன்றது தான். அவர்கள் தங்கள் வழக்கமான நடைமுறையை செய்துள்ளனர். சிபிஐக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.
சிபிஐ சோதனையில் வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. எந்த சட்ட நடைமுறையையும் சந்திக்க நான் தயார். சிபிஐக்கு இன்னும் ஏதும் தேவையென்றால் அதற்கும் நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்.
இந்த விவகாரத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். இப்போது நான் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார் ராசா.
கருணாநிதியுடன் சந்திப்பு:
இந் நிலையில் இன்று காலை முதல்வர் கருணாநிதியை ராசா அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சிபிஐ சோதனைகள் நடந்த பின் கருணாநிதியை ராசா சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.