திமுகவுடன் கூட்டணி கிடையாது-கூட்டணி குறித்து விரைவில் முடிவு-சரத் குமார்
நெல்லை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். ஆனால் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பாலபாக்யா ஹாலில் நடந்தது. இதற்கு சமக தலைவர் சரத் குமார் தலைமை வகித்தார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து நெல்லை மாநகர மாவட்டம், மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசித்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை கட்சி நிர்வாகிகள் என்னிடம் கொடுத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
வரும் தேர்தலில் நிச்சமயாக திமுக-வுடன் கூட்டணி கிடையாது. மற்ற கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் என்னுடன் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
3-வது அணி அமைக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. ஆனால் அவ்வாறு அமைந்தால் வரவேற்பேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமக ஆட்சி அமைக்கும் என்று கூறியதே இல்லை. மக்கள் என்று எங்கள் கட்சி்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ அன்று சமக ஆட்சி அமைக்கும்.
வரும் தேர்தலில் நான் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். ஆனால் இன்னும் எந்த தொகுதி என்று முடிவு செய்யவில்லை.
வரும் 18-ம் தேதி சிவகாசியில் நாடார் மகாஜன சங்க கூட்டம் நடக்கிறது. அதில் நான் பேசவிருக்கிறேன். 26-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் அத்திக்கடவு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எனது தலைமையில் இருசக்கர வாகன பேரணி நடக்கிறது.
வருகிற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி தென்காசியில் ச.ம.க. பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.