குரூப் 2 தேர்வு முடிவுகள்: 8 லட்சம் பேரை தவிக்க வைத்த டிஎன்பிஎஸ்ஸி!
சென்னை: ஏற்கெனவே எழுதிய தேர்வுகளுக்கு முடிவுகளை அறிவிக்காமல் தாமதித்து வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையும், இப்போது மீண்டும் குரூப் 2 தேர்வுகளை அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி 2000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு க்ரூப் 2 தேர்வுகளை நடத்தியது டிஎன்பிஎஸ்ஸி. கிட்டத்தட் 8 லட்சம் பேர் அந்தத் தேர்வை எழுதிவிட்டு, காத்திருக்கின்றனர் முடிவுகளுக்கு.
ஆனால் அதுபற்றி இன்று வரை முறையான ஒரு அறிவிக்கையையும் வெளியிடாத டிஎன்பிஎஸ்ஸி, மீண்டும் 3000 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர் பதவிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் காலி இடங்களை குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
இதனால் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களின் நிலை கேள்விக்குறியதாக உள்ளது. இந்தத் தேர்வுகளுக்காக பல மாதங்கள் பயிற்சி எடுத்து எழுதிவிட்டு காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஜூலா, ஆகஸ்ட், அக்டோபர் என மூன்று முறை தேர்வு முடிவுகளை ஒத்திப் போட்ட டிஎன்பிஎஸ்ஸி, டிசம்பரில் மீண்டும் தேர்வு வைப்பதாக கூறியுள்ளது. ஏற்கெனவே எழுதிய தேர்வு முடிவு பற்றி வாயே திறக்கவில்லை.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பது ஒரு சடங்குதான் என்றும், ஏற்கெனவே ஆளும்கட்சியின் பிரமுகர்கள் சிபாரிசுப்படி அவை விற்கப்பட்டுவிட்டதாகவும் அதிமுக, பாமக போன்ற கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. ஒரு பதவிக்கு ரூ 7 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதாகவும் இவை கூறியிருந்தன. இதனால் கடந்த மூன்று மாதங்களாகவே, இந்த தேர்வு முடிவுகள் வெளிவராது என்று கூறிவந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்ஸி மீண்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் பணிக்காக தேர்வுகளை அறிவித்து விண்ணப்பங்கள் பெற்ற டிஎன்பிஎஸ்ஸி, இன்னும் தேர்வுத் தேதியைக் கூட அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.