இந்தியா-ரஷ்யா 30 உடன்பாடுகளில் கையெழுத்து-20 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு இலக்கு
பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், இந்தியாவில், தமிழகத்தின் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கட்டித் தரவும் ரஷ்யா சம்மதித்துள்ளது.
இது போக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கி, தயாரிக்கவும், இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், இந்தியாவும், ரஷ்யாவும், கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கட்டுவது தொடர்பாக விவாதித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாட்டை அதிகரிப்பது என்றும் முடிவாகியுள்ளது.
இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பிற நாடுகளுடன், இரு நாடுகளும் வைத்துள்ள உறவுகளையும் தாண்டி மேலும் வலுவடையும், உறுதியாக இருக்கும், ஸ்திரமுடன் நீடிக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரஷ்யாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் இந்தியா.
தீவிரவாதத்தால் இந்தியாவைப் போலவே ரஷ்யாவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இரு நாடுகளும் இந்தப் பிரச்சினையின் ஆழத்தையும், விபரீதத்தையும் நன்கு உணர்ந்துள்ளன. புலனாய்வு, உளவு, தகவல் பரிமாற்றம், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படும் என்றார்.
மெத்வதேவ் பேசுகையில், ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராகும் முழுத் தகுதியும் இந்தியாவுக்கு உள்ளதாக ரஷ்யா கருதுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும்போது நிச்சயம் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.
தீவிரவாதிகளுக்கு எந்த நாடும் அடைக்கலமோ, அங்கீகாரமோ தர முடியாது. அப்படி தரும் நாடு நாகரீகமடைந்த நாடாக கருதப்பட முடியாது. தீவிரவாதிகள் கடும் தண்டனைக்குரியவர்கள் என்பது ரஷ்யாவின் கருத்தாகும் என்றார்.