இந்தியாவிடம் புகலிடம் கோரி 27 பாக். இந்து குடும்பங்கள் விண்ணப்பம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானைச் சேர்ந்த 27 இந்துக் குடும்பத்தினர் அரசியல் புகலிடம்கோரி இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில், சிறுபான்மை இந்து சமுதாயத்தினர் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்டவை தொடர்ந்து வருவதால் தங்களுக்கு இந்தியா அரசியல் புகலிடம் தர வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், பலுசிஸ்தானைச் சேர்ந்த 27 இந்துக் குடும்பத்தினர் அரசியல் புகலிடம் கோரி இந்தியத் தூதரகத்தை அணுகியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் விண்ணப்பங்களையும் அனுப்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக பலுசிஸ்தானில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக அவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடத்தல், படுகொலை, பணம் பறித்தல் உள்ளிட்டவை அதிகரித்துள்ளால் அங்குள்ள இந்துக்கள் இந்தியாவிடம் அரசியல் புகலிடம் கோர ஆரம்பித்துள்ளனர் என்று பலுசிஸ்தான் மாகாண மனித உரிமைகள் நலத்துறை இயக்குநர் சயீத் அகமது கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். பலுசிஸ்தானில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.