ஆளுநர் பரத்வாஜ் மீது நிறைய மரியாதை வைத்துள்ளேன்-எதியூரப்பா
ஷிமோகா: கர்நாடக ஆளுநர் பரத்வாஜுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் முதல்வர் எதியூரப்பா திடீரென அவரைப் பாராட்டியுள்ளார். அவர் மீது நிறைய மரியாதை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பரத்வாஜ் தனது மோதல் போக்கையும், அரசியல்வாதி நினைப்பையும் கைவிடாவிட்டால் அவர் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் எதியூரப்பா. இந்த நிலையில் அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார் எதியூரப்பா.
இதுகுறித்து எதியூரப்பா கூறுகையில், ஆளுநர் பரத்வாஜ் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். அவர் அனுபவம் வாய்ந்தவர், மூத்தவர். அவரது வழிகாட்டுதலை நான் ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்.
டிசம்பர் 31ம் தேதி ஆளுநரை சந்திக்கவுள்ளேன். அப்போது ஜனவரி 6ம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன். மேலும் அவருக்கும், எனக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் அவரிடம் பேசுவேன்.
மாநில நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும். எனவே இதை சரி செய்ய நான் முயல்வேன். மேலும், மூத்த அதிகாரிகளும் அவ்வப்போது ஆளுநரிடம் அரசின் பணிகள் குறித்து விளக்குமாறும் பணித்துள்ளேன் என்றார் எதியூரப்பா.
ரெட்டி சகோதரர்களுக்கும், எதியூரப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது எதியூரப்பாவுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து இரு தரப்பும் அவ்வப்போது உரசுவதும், கோபப்படுவதுமாக உள்ளனர்.
சமீபத்தில் எதியூரப்பாவுக்கு 2 கடிதங்கள் எழுதினார் பரத்வாஜ். அதில் ஒன்று, உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பான விவகாரத்தில் எதியூரப்பாவின் பங்கு என்ன என்று விளக்குமாறு கூறி கேட்டிருந்தார் ஆளுநர். இரண்டாவது, ரெட்டி சகோதரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டிருந்தார் ஆளுநர். முதலில் இதற்குப் பதிலளிக்கவில்லை எதியூரப்பா. இதுகுறித்து பகிரங்கமாக பரத்வாஜ் குறை கூறியிருந்தார். அதன் பின்னர் ஒரு பதிலை அனுப்பினார் எதியூரப்பா.
ஆனால் அது திருப்தியாக இல்லை என்று கூறினார் பரத்வாஜ். மேலும், எதியூரப்பாவிடம் விளக்கம் கேட்டு இன்னொரு கடிதம் அனுப்பப் போவதாகவும் அவர் கூறினார்.
இதனால் கோபமடைந்த எதியூரப்பா, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதப் போவதாக எச்சரித்தார். பின்னர் அதை கைவிட்ட அவர் கட்சித் தலைமையிடம் இந்த விவகாரத்தை விட்டு விட்டார்.
எதியூரப்பா, ஆளுநருடன் அமைதியாகப் போக முடிவு செய்திருந்தாலும் அவரது கட்சியினர் தொடர்ந்து பரத்வாஜை காங்கிரஸ் ஏஜென்ட் என்றே வர்ணித்து விமர்சித்து வருகின்றனர்.
பரத்வாஜ் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், ஆளுநர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு அவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.