எல்லா ஜாதியிலும் முதல்வர்கள் வந்து விட்டார்கள், வன்னியர்களால் வர முடியவில்லை-ராமதாஸ் ஏக்கம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்த பாமக நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் முதலமைச்சராக இருந்து விட்டனர். ஆனால்
வன்னியர் இன்னமும் முதலமைச்சராக ஆக முடியவில்லை. காரணம் இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் பா.ம.க. வில் இணைந்து மாம்பழத்துக்கு ஓட்டுபோடும் நிலைவரும்போது நாம் சுலபமாக ஆளும் வாய்ப்பை பெற முடியும்.
நம்மைபார்த்து அடிக்கடி கூட்டணி மாறுவதாக பேசுகின்றனர். நான் கேட்கிறேன் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே மாறி, மாறி கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கின்றன.
ஆனால் நம்மை பார்த்து மட்டும் இந்த கேள்வியை கேட்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை இதுவரை தனித்து தான் போட்டியிட்டு ஆட்சியை பிடித்ததா?
இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற நிலை வந்தால் அந்த தீர்மானத்தில் கையெழுத்திடும் முதல் கட்சி பா.ம.க. வாகத்தான் இருக்கும்.
2016-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்தே போட்டியிடும். அவ்வாறு போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழகத்தில் பாட்டாளி ஆட்சி அமையும்.
கூட்டணி இல்லாமல் இந்தியாவில் யாரும் தேர்தலை சந்திக்கவில்லை. இது கூட்டணி யுகம். அனைவரும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றனர். அதுபோலத்தான் பா.ம.க.வும் மாறி, மாறி கூட்டணி வைக்கின்றது என்றார் ராமதாஸ்.