தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி-அரிசோனா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்வளக்கல்லூரிக்கும், அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்திற்கும் இடையே உயர்கல்வி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் மீன்கள் வளர்த்தல் மற்றும் கடலில் விரால்கள் வளர்த்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இதற்கு தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பிரபாகரன் தலைமை வகித்தார். அக்வா கல்ச்சர் ஆப் சென்னை மையத்தின் ஆராய்ச்சியாளர் சக்திவேல், மீன்வளக்கல்லூரி இயக்குனர் வெங்கட் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரிக்கும், அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்திற்கும் இடையே உயர்கல்வி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே அரிசோனா பல்கலைக்கழக அதிகாரிகள் கையெழுத்திட்டு இருந்தனர். அதன் அடுத்தகட்டமாக கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இதனை அடுத்து விழா மலரை துணைவேந்தர் பிரபாகரன் வெளியிட்டார்.
தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் சென்னை சிபா ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் அரசு, வெர்ஜினியா பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கெல் ஸ்க்வார்ஷ், தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி பேராசிரியர் பெலிக்ஸ், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அஜித்குமார் உள்பட பலர் பேசினர்.