காங்கிரஸில் இணைந்தது சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை டெல்லியில் சந்தித்த சிரஞ்சீவி, கட்சி இணைப்புக்கான நடைமுறைகள் அனைத்தையும் பேசி முடித்த பிறகே, பத்திரிகையைாளர்களிடம் இந்த விவரத்தை அறிவித்தார்.
சிரஞ்சீவி கூறுகையில், 'இந்த இணைப்புக்கு பிரதிபலனாக நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் பிரஜா ராஜ்யம் தொண்டர்களுக்கு காங்கிரஸில் நல்ல எதிர்காலம் உள்ளது. நாங்கள் எந்த நிபந்தனையையும் முன்வைக்காமல்தான் காங்கிரஸில் இணைகிறோம். ஏழை மக்கள் முன்னேற வேண்டும். அது காங்கிரஸ் ஆட்சியில்தான் நடக்கும்', என்றார்.
உடனிருந்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, "காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக மாறியிருக்கிறார் சிரஞ்சீவி", என்றார்.
அதே நேரம், பிரஜா ராஜ்யம் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட இருக்கும் பதவிகள் குறித்து வீரப்ப மொய்லி வாய் திறக்கவில்லை. சிரஞ்சீவிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படக் கூடும் என்கிறார்கள். பிரஜா ராஜ்யம் கட்சியை முறைப்படி இணைக்கும் விழா, சோனியா காந்தி, ராகுல் காந்தி முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக ஹைதராபாதில் நடக்கிறது.
முதல்வர் பதவி தர மறுத்த காங்கிரஸை ஒழிக்காமல் விடமாட்டேன் என்ற சபதத்தோடு, ஆந்திராவைக் கலக்கி வரும், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற காங்கிரஸ், அந்த சரிவை சிரஞ்சீவி மூலம் சரிகட்டப்பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்!