கல்லூரி மாணவி கொலை - குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் தயக்கம் - மாதர் சங்தம் குற்றச்சாட்டு
ஊத்தங்கரை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஊத்தங்கரை மாணவி கனகலெட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழக டிஜிபி-யை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறை இயக்குநருக்கு மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ. வாசுகி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள போத ராஜன்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தனின் மகள் கனகலட்சுமி (21).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள புதுப்பாளையம் இதயா கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கனகலட்சுமி தினமும் பேருந்தில் கல்லூரி சென்று வருவது வழக்கம். கடந்த ஜனவரி 21-ம் தேதி அன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
மறு நாள் முகம் சிதைக்கப்பட்டு, நிர்வாண கோலத்தில் மாந்தோப்பில் அவரது பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது.
முன்னதாக ஊத்தங்கரையைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்களது நண்பனைக் கனகலட்சுமி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததாகவும், இல்லை எனில் உயிரோடு விட மாட்டோம் என்று தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் கனகலட்சுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
வழக்கம்போல கொலையுண்ட பெண்ணின் நடத்தை மீது சந்தேகத்தை எழுப்பிக் கொண்டு, மனமுடைந்த பெற்றோர் மற்றும் உறவினரைக் கூடுதல் வேதனைக்கு ஆளாக்கிக் கொண்டுள்ள காவல்துறையின் செயல்பாடு திருப்திகமராக இல்லை.
அரசியல் செல்வாக்கு காரணமாக குற்றவாளிகளைக் கைது செய்ய ஊத்தங்கறை போலீசார் தயக்கம் காட்டுவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கனகலட்சுமியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு தினசரி அழைத்து வந்து விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தி வருகின்றனர்.
எனவே, கொலை செய்யப்பட்ட கனகலட்சுமிக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
-இவ்வாறு அவர் அந்த கடித்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications