எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி
சென்னை: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது.
அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன்.
இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது.
எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.